'பிரணாப் முகர்ஜியை சந்தித்தேன்' விஜய் மல்லையா புது தகவல்

6

புதுடில்லி :''கிங்பிஷர் விமான நிறுவனம் வீழ்ச்சியை சந்தித்தபோது, அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தேன்,'' என, வங்கிகளிடம் கடன் வாங்கி வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற தொழில்அதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

நம் நாட்டின் வங்கிகளிடம், 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு தொழிலதிபர் விஜய் மல்லையா, 2016ல் தப்பிச் சென்றார்.

அவரை நாடு கடத்தும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக, பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது.



இந்நிலையில், யு டியூபர் ராஜ் ஷாமானி உடனான 'பாட் காஸ்ட்' எனப்படும், 'ஆன்லைன்' வானொலி நிகழ்ச்சியில், விஜய் மல்லையா கூறியதாவது:

'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம், 2008 வரை சீராக இயங்கியது. ஆனால், உலகளாவிய நிதி நெருக்கடி துவங்கியுடன், நிலைமை தலைகீழானது.

பொருளாதார வீழ்ச்சி இந்தியாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. பணம் நின்றுவிட்டது; ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்தது.

பொருளாதார சூழலை உணர்ந்து, கிங்பிஷர் நிறுவனத்தின் செயல்பாடுகளை குறைக்க, காங்கிரசைச் சேர்ந்த அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தேன்.

'கிங்பிஷர் நிறுவனத்தின் விமானங்களை குறைக்க வேண்டும்; ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்' என, அவரிடம் கோரிக்கை வைத்தேன். இந்த மந்தமான பொருளாதார சூழ்நிலையில் செயல்பட முடியாது என்றும் அவரிடம் தெரிவித்தேன்.



ஆனால் அவர், விமானங்களை குறைக்க வேண்டாம்; வங்கிகள் ஆதரவு வழங்கும் என, கூறினார். அப்படித்தான் வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கினோம். எனினும், நிதி நெருக்கடியால், கிங்பிஷர் நிறுவனத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

என் கடன் தொகையும், 11.5 சதவீத வட்டியும் சேர்த்து நான் கட்ட வேண்டிய மொத்தத் தொகை 6,203 கோடி ரூபாய். ஆனால், என் சொத்துகள் வாயிலாக, 14,000 ரூபாய் கோடியை வங்கிகள் பறிமுதல் செய்துள்ளன.

நான் திருடவும் இல்லை; ஓடியும் போகவில்லை. நான், இந்தியா திரும்பாததற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. என்னை, 'மோசடிக்காரன்' என, எப்படி அழைக்க முடியும்?

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement