பிரெஞ்ச் ஓபன்: பைனலில் அல்காரஸ்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் பைனலுக்கு அல்காரஸ் முன்னேறினார்.

பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், 'நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், இத்தாலியின் லோரென்சோ முசெட்டி மோதினர்.

முதல் செட்டை முசெட்டி 6-4 என கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட அல்காரஸ், 'டை பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 7-6 என தன்வசப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய அல்காரஸ், 3வது செட்டை 6-0 என மிகச் சுலபமாக தட்டிச் சென்றார். நான்காவது செட்டில் அல்காரஸ் 2-0 என முன்னிலையில் இருந்த போது, இடது கால் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் முசெட்டி பாதியில் விலகினார்.

இரண்டு மணி நேரம், 25 நிமிடம் நீடித்த போட்டியில் அல்காரஸ் 4-6, 7-6, 6-0, 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்குள் நுழைந்தார். கடந்த ஆண்டு பைனலில் அசத்திய அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி இத்தொடரில் தனது முதல் பட்டத்தை கைப்பற்றினார். தவிர இவர், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 5வது முறையாக பைனலுக்கு முன்னேறிய 2வது ஸ்பெயின் வீரரானார். முதலிடத்தில் ரபெல் நடால் (30 பைனல்) உள்ளார்.




சாதிப்பாரா சபலென்கா


பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இன்று, உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, 2வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோகோ காப் மோதுகின்றனர். டபிள்யு.டி.ஏ., ஒற்றையரில் இருவரும் 10 முறை விளையாடிய போட்டியில், தலா 5ல் வென்றனர். கடைசியாக மாட்ரிட் ஓபன் பைனலில் (2025) மோதினர். இதில் சபலென்கா வெற்றி பெற்றார். பிரெஞ்ச் ஓபனில் முதன்முறையாக மோதுகின்றனர். இன்று வெற்றி பெறும் வீராங்கனை பிரெஞ்ச் ஓபனில் புதிய சாம்பியன் ஆகலாம்.

Advertisement