புஜாரா மாயம்... மாறியது முகம்: ரோகித் சர்மா ருசிகரம்

மும்பை: ''கொளுத்தும் வெயிலில் புஜாரா 2-3 நாள் அசராமல் பேட் செய்தார். தொடர்ந்து 'பீல்டிங்' செய்ததால், என் முகத்தின் நிறமே மாறியது,'' என ரோகித் சர்மா தெரிவித்தார்.

டெஸ்ட் அரங்கில் இருந்து ரோகித் சர்மா 38, ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், புஜாரா 37, 'ஐயம் வெயிட்டிங்' என இன்னும் காத்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் புறக்கணிக்கப்படும் இவர், 103 டெஸ்டில் 19 சதம் உட்பட 7195 ரன் எடுத்துள்ளார். இவரது மனைவி பூஜா எழுதிய 'தி டயரி ஆப் எ கிரிக்கெட்டர்ஸ் வைப்' புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது.


இதில் பங்கேற்ற ரோகித் சர்மா கூறியது: ஜூனியர் போட்டிகளில் விளையாடிய காலத்தில் புஜாராவை (சவுராஷ்டிரா அணி) எப்படி அவுட்டாக்குவது என்று தான் எங்களது மும்பை அணியின் கூட்டத்தில் விவாதிப்போம். இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு விடை காண்பது கடினமாக இருக்கும். இவரை வெளியேற்ற தவறினால், போட்டியில் தோற்றுவிடுவோம் என கருதுவோம்.

அசராத ஆட்டம்: எனக்கு 14 வயது இருக்கும் என நினைக்கிறேன். அப்போது, போட்டியில் பங்கேற்று மாலையில் வீடு திரும்பிய போது எனது முகத்தின் நிறம் முற்றிலும் மாறியிருந்தது. இதற்கு புஜாரா காரணம். கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் 2-3 நாள் அசராமல் பேட் செய்தார். 'பீல்டிங்' செய்த நாங்கள் தான் திண்டாடினோம்.


ஒரு முறை எனது அம்மா,' நீ வீட்டில் இருந்து போட்டிக்கு போகும் போது நன்றாக இருக்கிறாய். ஒரு வாரம் அல்லது 10 நாள் கழித்து வீட்டுக்கு திரும்பும் போது உனது தோற்றம் வித்தியாசமாக இருக்கிறது. இந்த மாற்றம் ஏன்,'' என கேட்டார்

அதற்கு,'' அம்மா, நான் என்ன செய்வேன். புஜாரா என்ற பெயரில் ஒரு பேட்டர் இருக்கிறார். 3 நாள் கூட துாணாக நின்று பேட் செய்கிறார். இதனால் தான் என் முகம் கருப்பாக மாறி பொலிவிழந்துவிடுகிறது,'' என்றேன்.

ஆரம்ப காலத்தில் புஜாரா மீது இப்படிப்பட்ட எண்ணம் தான் இருந்தது. பின் இருவரும் இந்திய அணிக்காக பங்கேற்றோம். இரு முழுங்கால்களின் முன்புற தசைநாரில் ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாது, அர்ப்பணிப்பு உணர்வுடன் 103 டெஸ்டில் விளையாடினார்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.



அம்மா ஆசை


புஜாரா கூறுகையில்,''இளம் பருவத்தில் எனது அம்மா உறுதுணையாக இருந்தார். சிறந்த மனிதராக இருக்க வேண்டும் என வலியுறுத்துவார். எனது 17வது வயதில், அவரை பறிகொடுத்தேன். இந்திய அணிக்காக விளையாடுவேன் என நம்பினார். அவரது எண்ணம் பலித்தது,''என்றார்.

Advertisement