சித்தராமையா, டி.கே. சிவகுமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

1

புதுடில்லி: பெங்களூரு கூட்ட நெரிசல் பலி சம்பவத்திற்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர், துணை முதல்வர் இருவரும் தங்கள் பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தி உள்ளார்.



ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பெங்களூரு முதல் முறையாக வென்றது. இதை கொண்டாட சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்.


பெரும் சர்ச்சையான இந்த சம்பவத்தில் உயரதிகாரிகள் பணிநீக்கம், சஸ்பெண்ட் என நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். பெங்களூரு வீரர் விராட் கோலிக்கு எதிராக கப்பன் பார்க் போலீஸ் ஸ்டேஷனில் புகாரும் அளிக்கப்பட்டு உள்ளது.


இந் நிலையில், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர், துணை முதல்வர் இருவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;


மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தால் டி.கே. சிவகுமார் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகம் முழுவதும் ராகுல் செல்கிறார். அனைத்தையும் பற்றி பேசுகிறார். ஆனால் பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் பற்றி ஒன்றுமே தெரியவில்லை.


முதலில் 3 பேர் பலியாகிவிட்டதாக செய்தி வந்த நேரத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அவர்களின் பேரக் குழந்தைகள், ஐஏஎஸ் அதிகாரிகள் செல்பி எடுத்துக் கொண்டு இருந்துள்ளனர். 11 பேர் பலியான பின்னரும் அந்த வெற்றிக் கொண்டாட்டம் நடந்துள்ளது.


இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement