புது மின்மாற்றிக்கு இணைப்பு வழங்காததால் சாத்தணஞ்சேரியில் தொடரும் மின்னழுத்த பிரச்னை

சாத்தணஞ்சேரி:உத்திமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரி கிராமத்திற்கான மின் வினியோக பணிகள், திருமுக்கூடல் மின் பகிர்மான வட்டம் வாயிலாக நிர்வகிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஓராண்டாக இப்பகுதியில் குறைந்த மின் அழுத்தம் பிரச்னை நிலவுகிறது. இதனால், வீடுகளில் இரவு நேரங்களில் டியூப்லைட் ஒளிர்வதில் சிக்கல் ஏற்படுவதோடு, மின்விசிறிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன.

சாத்தணஞ்சேரியில் நிலவும் இத்தகையை பிரச்னையை போக்கவும், சீராக மின்சாரம் வினியோகிக்கவும், அப்பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதன்படி, மின்வாரியம் சார்பில், சில மாதங்களுக்கு முன், சாத்தணஞ்சேரி பெரியத் தெரு மற்றும் பாலன் நகர் ஆகிய பகுதிகளில், 25 கே.வி.ஏ., திறன் கொண்ட புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.

எனினும், அதற்கான மின் இணைப்பு இதுவரை வழங்காததால், சாத்தணஞ்சேரியில் குறைந்த மின்னழுத்த பிரச்னை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

எனவே, புதிதாக அமைத்துள்ள மின்மாற்றி வாயிலாக மின் வினியோகம் துவங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, திருமுக்கூடல் மின் பகிர்மான வட்ட அலுவலர் ஒருவர் கூறியதாவது:

சாத்தணஞ்சேரியில் புதிதாக அமைத்த மின்மாற்றிகளுக்கு இணைப்பு வழங்குவதில், பணிச்சுமை, ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கால தாமதம் ஏற்பட்டது.

விரைவில் அப்பகுதியில் புது மின்மாற்றிகளுக்கு இணைப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement