வைப்பாற்றில் கொட்டப்படும் குப்பையால் நீர் நிலை பாதிப்பு

சாத்துார், : சாத்துார் படந்தால் வைப்பாற்றில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் நீர் நிலை பாதிக்கப்பட்டு வருகிறது.

வெம்பக்கோட்டையில் உற்பத்தி ஆகும் வைப்பாறு நதி பல்வேறு கிராமங்களில் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் படந்தால் ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை ஆற்றங்கரையில் கொட்டப்பட்டு வருகிறது.

மக்கும், மக்காத குப்பைகள் என பிரித்து வழங்கப்படாது குப்பைகளை ஒன்றாக சேகரித்துக் கொண்டு வந்து இந்த பகுதியில் துப்புரவு பணியாளர்கள் கொட்டி விட்டு செல்கின்றனர். இதன் காரணமாக ஆற்றுக்குள் துர்நாற்றம் வீசுவதோடு நீர் நிலை மாசு அடைந்து வருகிறது.

படந்தால் ஊராட்சியில் கரையோரம் உள்ள நகர்ப்பகுதியில் வசிக்கும் மக்களும் குப்பைகளில் இருந்து வரும் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். இந்த ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் நீர் நிலை மாசு அடைவதை தடுக்கலாம்.பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement