கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு: தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு

பொகொடா: கொலம்பியா நாட்டின் அதிபர் வேட்பாளரான மிகுயல் உரிப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. இந்த நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சியான பழமைவாத ஜனநாயக மையம் கட்சியை சேர்ந்த எம்.பி. மிகுயல் உரிப்,39, அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.


இவர் தலைநகர் பொகொடாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, திடீரென அவர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது முதுகு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அவர் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் வேறு யாராவது ஈடுபட்டிருக்கிறார்களா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என கொலம்பியாவின் பாதுகாப்பு அமைச்சர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்தார்.



மிகுயல் உரிப் கொலம்பியாவில் உள்ள ஒரு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர். நாட்டின் லிபரல் கட்சியுடன் தொடர்புடையவர். அவரது தந்தை ஒரு தொழிலதிபர் மற்றும் தொழிற்சங்கத் தலைவர். அவரது தாயார், பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement