வைகையில் கருவேலமரங்கள்: கூட்டுகுடிநீர் திட்டங்களுக்கு பாதிப்பு

மானாமதுரை: மானாமதுரை வைகை ஆற்றில் மணல் திட்டுக்களையும்,குடிநீர் திட்ட உறை கிணறுகளையும் கருவேல மரங்கள், நாணல் செடிகள் மறைத்து வருவதினால் குடிநீர் திட்டங்களுக்கு ஆபத்து ஏற்பட உள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து வைகை ஆற்றில் வரும் தண்ணீர் தேனி, திண்டுக்கல்,மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும், விவசாய தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.

மதுரை அருகே விரகனூர் மதகு அணையிலிருந்து மானாமதுரை அருகே உள்ள வேதியரேந்தல் மதகு அணை வரை உள்ள வைகை ஆற்று பகுதியிலிருந்து அருப்புக்கோட்டை,சிவகங்கை, சாயல்குடி,முதுகுளத்தூர், மானாமதுரை போன்ற ஊர்களுக்கும் மேலும் 170க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 500க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக வைகை ஆற்று பகுதியில் சுத்தம் செய்யும் பணி நடைபெறாமல் உள்ளதினால் எங்கு பார்த்தாலும் மணல் திட்டுக்கள் இன்றி கருவேல மரங்களும்,நாணல் செடிகளும் வளர்ந்து காணப்படுவதினால் குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்படும். வைகை ஆற்று பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள், நாணல் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement