பழுதான மின்கம்பம் உடைந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர், ரெட்டிபாளையம் சாலை, வகாப் நகரை சேர்ந்தவர் காயத்ரி.

இவர், பெரிய கோவில் அருகே சோழன் சிலை பகுதியில் சாலையோரம், பொம்மை மற்றும் இளநீர் கடை நடத்தி வருகிறார். கடையில் காயத்ரி மாமனார் சுப்பிரமணியன், 60, உதவியாக இருந்தார்.

இவரது கடைக்கு அருகே உள்ள மரக்கிளையால், வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்தது. மரக்கிளையை வெட்டுவதற்காக மாநகராட்சி பணியாளர்கள், நேற்று மதியம் வந்தனர்.

பணியாளர் ஒருவர், காயத்ரி கடைக்கு பின்பக்கமிருந்த மின் இணைப்பு இல்லாத, பழுதடைந்த மின் கம்பத்தில் ஏறி, மரக்கிளையை வெட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது, கம்பம் திடீரென முறிந்து கடையில் இருந்த சுப்பிரமணியன் தலையில் விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

பழுதான மின் கம்பத்தை அகற்ற அப்பகுதி மக்கள், பலமுறை புகார் அளித்தும், மின்வாரிய அலுவலர்கள் அலட்சியமாக இருந்ததே விபத்துக்கு காரணம் என, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement