ஜீப்பில் மோதிய கன்டெய்னர் இரு சுற்றுலா பயணியர் பலி

ப.வேலுார்: மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலத்தை சேர்ந்த எட்டு பேர், தமிழகத்திற்கு 'பொலிரோ' ஜீப்பில் சுற்றுலா வந்தனர். சுற்றுலா முடிந்து நேற்று மதியம், மதுரையில் இருந்து நாமக்கல் மாவட்டம், பரமத்தி வழியாக குஜராத் நோக்கி சென்றனர்.

பரமத்தி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே வந்தபோது, நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையோரம், ஜீப்பை நிறுத்தி அனைவரும் சாப்பிட்டனர். சிலர் ஜீப்பிலும், சிலர் சாலையிலும் அமர்ந்திருந்தனர். அப்போது கொச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து ஜீப்பின் பின்புறம் அதிவேகமாக மோதியது. இதில் அருகே இருந்த பள்ளத்தில் ஜீப் துாக்கி வீசப்பட்டது. ஜீப் மீது கன்டெய்னர் லாரியும் உருண்டு விழுந்தது. இதில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ரிஷப், 35, ரூபாலி ஜல்காவு, 35, சம்பவ இடத்தில் பலியாகினர்.

ஜீப்புக்குள் இருந்த மூன்று பேர் பலத்த காயமடைந்ததால், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கேரளாவைச் சேர்ந்த லாரி டிரைவர் நிதிஷை, 33, போலீசார் கைது செய்தனர்.

Advertisement