சாக்கோட்டையில் தடுப்பணை கட்டாமல் நிதி எடுத்ததாக புகார்
காரைக்குடி: சாக்கோட்டை அருகே தடுப்பணை கட்டாமல், முறைகேடாக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சாக்கோட்டை அருகே ஆம்பக்குடி ஊராட்சி குடுகவயல் கண்மாயில் தடுப்பணை கட்டுவதற்கு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தடுப்பணை கட்டும் பணி நடைபெற்ற இடத்தில் இதுவரை எந்த தடுப்பணையும் கட்டப்படாமல் பணி நடந்ததாக நூறு நாள் ஊழியர்களுக்கு ரூ.1.93 லட்சம் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து பாண்டிகணேஷ் கூறியதாவது, தடுப்பணை கட்டுவதற்காக ரூ.5 லட்சம் ஒதுக்கியுள்ளனர்.
இது வரை தடுப்பணை கட்டவில்லை. ஆனால், வேலை பார்த்ததாக ரூ.1.93 லட்சம் சம்பளம் வழங்கியுள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை, என்றார்.
இது குறித்து சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது, தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கியது உண்மை தான். வேலை உறுதி திட்ட பணிகளும் நடந்தது.
ஆனால் சில காரணங்களால் தடுப்பணை கட்டும் பணி பாதியில் நிற்கிறது. பணி செய்தவர்களுக்கு சம்பளம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை திருப்பி அனுப்பிவிட்டோம், என்றார்.