தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டி ராணிபேட்டை அணி சாம்பியன்

சென்னை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம் ஆகியவை இணைந்து, டி.சி.எல் எனப்படும் தமிழ்நாடு சைக்கிளிங் லீக்கின் மூன்றாவது சீசன் போட்டி, சென்னையின் நேப்பியர் பாலத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.

இதில் சென்னை, கோவை உட்பட மாநிலத்தின் சிறந்த எட்டு அணிகள் போட்டியிட்டன. முதல் நாள் பந்தயத்தில், 12, 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கான போட்டி நடந்தது.

கடைசி நாளான நேற்று, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான, 'ஓப்பன் டு ஆல்' பிரிவுக்கான போட்டி நடந்தது.

பார்முலா கார் பந்தயம் நடந்த 3.7 கி.மீ., துார சுற்றுப்பாதையில், அதாவது, நேப்பியர் பாலத்தில் துவங்கி, தீவுத் திடல் வழியாக, மீண்டும் நேப்பியர் பாலம் வரை பந்தயம் நடந்தது.

விறுவிறுப்பான போட்டியில், ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்த சைக்கிள்களின் அணிவகுப்பு, காண்போருக்கு பிரமிப்பை எற்படுத்தின.

போட்டி முடிவில், ராணிபேட்டை மாவட்டத்தின் ரான்சைசர் அணி வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது. இரண்டாவது இடத்தை, திருச்சியின் ராக்போர்ட் அணி, மூன்றாம் இடத்தில் நம்ம சென்னை ரைடர் அணிகள் இடம் பிடித்தன.

கோவை ஏமாற்றம்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டியின், முதல் இரண்டு சீசனில் சிறப்பாக போட்டியிட்டு, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய, கோவை பெடல்ஸ் அணிக்கு, இந்த சீசன் ஏமாற்றத்தை அளித்தது.

Advertisement