தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் ... கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி

1

மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைப்போம்,'' என, மதுரை ஒத்தக்கடையில் நேற்று மாலை நடந்த பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். 'வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தனித்தே ஆட்சி அமைக்கும்' என, அக்கட்சியின் நிர்வாகிகள் கூறி வரும் நிலையில், கூட்டணி ஆட்சி தான் அமையும் என, அமித்ஷா உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


@அமித்ஷா மேலும் பேசியதாவது:



தமிழகத்தின் ஒவ்வொரு மூலை, முடுக்கிலும் இருந்து வந்துள்ளீர்கள். மதுரை மண்ணில் மீனாட்சி அம்மனை வணங்கி பேச்சை துவக்குகிறேன். சொக்கநாதர், கள்ளழகர், திருப்பரங்குன்றம் முருகனை தலை வணங்குகிறேன். தமிழகத்திற்கு வந்து தமிழர்களை சந்திக்கும் போது, பெருமை மிகு தமிழில் பேச முடியவில்லையே என்று வருந்துகிறேன்.



நம் மதுரை 3,000 ஆண்டுகள் பழமையான மண். இந்த மண்ணின் நாயகனாக திகழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரையும் வணங்குகிறேன். ஜூன், 22ல் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. அதை சிறப்பாக நடத்தி தர வேண்டும். மதுரை மண், பல மாற்றங்களுக்கு வித்திட்ட மண். இந்த கூட்டமும் ஒரு மாற்றத்தை உண்டாக்கும்.

தோற்கடிப்பர்



தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும். 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று, பாஜ., - அ.தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைக்கும். நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் என் சிந்தனை தமிழகம் மீது தான் இருக்கும்.



முதல்வர் ஸ்டாலின், 'அமித்ஷா வந்தாலும், தி.மு.க.,வை தோற்கடிக்க முடியாது' என்கிறார். அமித்ஷாவால் முடியாவிட்டாலும், தமிழக மக்கள் தோற்கடிப்பர். வரும் தேர்தலில், தமிழக மக்கள் தி.மு.க.,வை துாக்கி வீசியெறிவர். 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக நாட்டின் வடக்கு பகுதியில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.



தமிழகத்தில் இருந்தும் ஆதரவு குரல் எழுந்தது. பஹல்காமில் அப்பாவி மக்களை மதத்தின் பெயரால் கொன்றவர்களை பிரதமர் மோடி, அவர்களின் எல்லைக்குள் புகுந்து அடித்தாரே, அது தான் நாம் பாகிஸ்தானுக்கு கற்பித்த பாடம். ஆப்பரேஷன் சிந்துார் வாயிலாக முப்படைகளின் வீரத்தை வெளிப்படுத்தி உள்ளோம்.



பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடத்திற்குள் நுழைந்து, அவர்களின் இருப்பிடத்தில் துல்லிய தாக்குதல் நடத்தியது நம் ராணுவம்.

தன்னிறைவு



இதனால், பிரதமர் மோடி ஆட்சியில் எல்லா துறைகளையும் போல, நம் ராணுவமும் தன்னிறைவு பெற்றுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. ஆப்பரேஷன் சிந்துாரால் நம் வான்வெளியின் வல்லமையை நிரூபித்துள்ளோம்.



ஆப்பரேஷன் சிந்துார் இன்னும் முடியவில்லை என, பிரதமர் மோடி கூறியுள்ளார். இதன் வாயிலாக, பயங்கரவாதிகள் தாக்கினால் மீண்டும் வீடு புகுந்து அடிப்போம் என்பதை தான் அவர் குறிப்பிடுகிறார்.



தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தல், ஒவ்வொரு பா.ஜ., தொண்டர்களுக்கும் முக்கியமான களமாகும். 2024ம் முக்கியமான ஆண்டு தான். அப்போது தான் மோடி, 3வது முறையாக பிரதமரானார். ஒடிஷாவில் முழு பலத்துடன் பா.ஜ., ஆட்சி அமைத்தது. ஹரியானாவில் மூன்றாவது முறையாக வெற்றியை பதிவு செய்தது. மஹாராஷ்டிராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 2025ல் டில்லியில், 27 ஆண்டுக்கு பின் பா.ஜ., ஆட்சி ஏற்பட்டது.



டில்லியை போல, 2026ல் தமிழகத்திலும் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி ஆட்சி மலரும். மேற்கு வங்கத்திலும் பா.ஜ., கூட்டணி ஆட்சி கண்டிப்பாக அமையும். தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க., ஊழல், ஊழல் என திளைத்துள்ளது. மத்திய அரசு, ஏழை மக்களுக்கு கொடுக்கும் பணத்தை மடை மாற்றி அவர்களுக்கு கிடைக்கவிடாமல் செய்கின்றனர். தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வால், மக்கள் வாழ முடியாத சூழலில் தவிக்கின்றனர்.



மத்திய அரசு திட்டங்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. டாஸ்மாக்கில், 35,750 கோடி ரூபாய் ஊழல் செய்து, சட்டவிரோத ஆட்சியை தி.மு.க., நடத்துகிறது. தமிழகத்தில் நுாற்றுக்கு நுாறு தோல்வியடைந்த அரசாக தி.மு.க., காட்சியளிக்கிறது.



தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியில், 10 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால், 90 சதவீதம் நிறைவேற்றியதாக கூறுகின்றனர். தி.மு.க.,விற்கு தைரியம் இருந்தால் தேர்தல் வாக்குறுதி பட்டியலை எடுத்து வாருங்கள். அதில், எத்தனை வாக்குறுதியை நிறைவேற்றினீர்கள் என்று விவாதிப்போம். தமிழகத்தில் ஊழல் மட்டுமல்ல, கள்ளச்சாராயத்தாலும் மக்கள் உயிரிழந்துள்ளனர்.



தென்தமிழகத்தில் ஜாதி, பிரிவினைவாத அரசியல் செய்கின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கனவாகி விட்டது. ஆனால், முதல்வருக்கு இதுகுறித்து எல்லாம் கவலையோ, அக்கறையோ இல்லை.



ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த திருப்பரங்குன்றம் மலையை, 'சிக்கந்தர் மலை' என கூறும் தைரியம் தி.மு.க.,விற்கு வந்துள்ளது. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றை இதுபோல் அரசியல், பிரிவினை செய்து ஆட்சி நடத்துகிறது. ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. அதில் ஒற்றுமை, வலிமையை காட்ட வேண்டும்.



தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் தமிழ், தமிழ் எனக்கூறும் முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வி பாடத்திட்டங்களை தமிழில் ஏன் கொண்டு வரவில்லை. பொறியியல் படிப்பை தமிழில் ஏன் கொண்டு வரவில்லை. தமிழகத்தின் தொன்மை, மரபு வாய்ந்த செங்கோலை உயர்ந்த இடத்திற்கு பிரதமர் மோடி கொண்டு சென்றாரே, அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தீர்களா?



பிரதமர் மோடியின், 11 ஆண்டு கால ஆட்சி வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது. 4.19 டிரில்லியன் வளர்ச்சி அடைந்துள்ளது. காங்., ஆட்சியின் போது தமிழகத்திற்கு வழங்கியதை விட, 10 மடங்கு, அதாவது, 6 லட்சத்து 80,000 கோடியை தமிழகத்திற்கு பா.ஜ., அரசு வழங்கியுள்ளது.



ரோடு வளர்ச்சிக்கு, 63,000 கோடி, கட்டுமானப்பணிக்கு, 73,000 கோடி, விமான நிலையத்திற்காக, 3,000 கோடியை தமிழகத்திற்கு பா.ஜ., அரசு நேரடியாக வழங்கியுள்ளது. வரும் தேர்தலில் பா.ஜ., தொண்டர்களின் சிந்தனை, செயல் எல்லாமே தி.மு.க., ஆட்சியை எப்போது அகற்ற போகிறோம் என்று தான் இருக்க வேண்டும்.



இவ்வாறு அமித்ஷா பேசினார்.



அப்போது இரு கைகளையும் துாக்கி வெற்றிக்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுங்கள் எனக்கூறி, 'பாரத் மாதா கி ஜே... வந்தே மாதரம்' என, அமித்ஷா முழங்கினார்.

எழுச்சியை ஏற்படுத்தும்



மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது: பிரதமர் மோடி, 11 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். இந்தியாவின் வளர்ச்சி குறித்து பல நாடுகள் பேசுகின்றன.
ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலம், காஷ்மீரில் செனாப் ரயில்வே பாலத்தை திறந்து வைத்து முத்திரை பதித்தார். மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு மிகப்பெரிய எழுச்சியை
ஏற்படுத்தும்.



இந்த மாநாடு பா.ஜ.,விற்கு திருப்புமுனையாக இருக்கும். தி.மு.க.,வை வீட்டிற்கு
அனுப்பும் மாநாடாகவும் அது இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்


ஒற்றை இலக்கு தான்




தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:



தமிழகத்தின் வளர்ச்சியை தி.மு.க., நான்கு ஆண்டுகளாக பின்னோக்கி அழைத்து செல்கிறது. மக்களை ஏமாற்றும் தி.மு.க.,வை தோற்கடிக்கவே அமித்ஷா மதுரை வந்துள்ளார். 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ், வறுமையை வைத்து மட்டுமே அரசியல் செய்தது. ஆனால், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் தான், வறுமையால் வாடியவர்களை கைதுாக்கி மேலே கொண்டு வந்துள்ளது.மத்திய அரசின் திட்டங்கள் மீது 'ஸ்டிக்கர்' ஒட்டி தமிழகத்தில் அரசியல் செய்கின்றனர். தமிழகம் முழுதும் மக்கள் நிம்மதியில்லாத வாழ்க்கை நடத்துகின்றனர். வடகிழக்கு மக்கள் தற்போது அகிம்சை வழியில் வருகின்றனர். பா.ஜ. ஆட்சி ஆரம்பிக்கும் போது, 32 இடங்கள் நக்சலால் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒரு பகுதியில் உள்ள நக்சலை அழிக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 2026 ஒற்றை இலக்கு தி.மு.க., வீட்டிற்கு அனுப்பி பா.ஜ., ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான்.







முருகன் சிலை, வேல் பரிசு

அமித்ஷாவுக்கு முருகன் சிலை, வேல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில பொருளாளர் சேகர், மாநில பொது செயலர்கள் கருப்பு முருகானந்தம், ராமசீனிவாசன், கார்த்திகாயினி, ஏ.பி.முருகானந்தம், தேசிய மகளிரணி தலைவி வானதி, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, விவசாய அணி துணைத்தலைவர் சசிராமன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிம்ம பெருமாள், நகர் தலைவர் மாரிசக்கரவர்த்தி, கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்வியாளர் பிரிவு நிர்வாகி ஸ்ரீகாந்த், அமித்ஷா பேசியதை மொழி பெயர்த்தார்.







தி.மு.க.,விற்கு 'ஷா' பயம்

பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: சூரியன் வரும் என மேடை அமைத்தோம். அமித் ஷா வந்தவுடன் சூரியன் மறைந்து விட்டது. எப்போதும் தி.மு.க.,வுக்கு, 'ஷா' என்றால் பயம் தான். தமிழக போலீசை கையில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் சரியாக நிர்வாகம் செய்கிறாரா? தினம் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவாகிறது. இதற்கெல்லாம் பதில் அளிக்கத்தான், 2026 தேர்தலுக்கு கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இது பொருந்திய கூட்டணி. 'இருந்தாலும் வாழ்ந்தாலும் பேர் சொல்ல வேண்டும்' என்ற எம்.ஜி.ஆர்., வழியில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அமைந்துள்ளது. இதை அமித் ஷா ஏற்பாடு செய்துள்ளார். 2026ல் பா.ஜ, வெல்வது நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement