மருத்துவமனைக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால்... அவதி; விரைந்து நடவடிக்கை எடுக்க நோயாளிகள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு போதிய பஸ் வசதியின்மையால் நோயாளிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இயங்கி வருகிறது.

இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து சிறுவங்கூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வழியாக குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

நடந்து செல்லும் நோயாளிகள்



இதனால், கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் செல்லும் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்களில் சென்று ரோடுமாமந்துார் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோக்கள் மூலம் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

அதற்கு வசதி இல்லாத பெரும்பாலோனார் நடந்து செல்கின்றனர்.

நேரடியாக பஸ் வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், உள்நோயாளிகளை பார்க்க செல்லும் அவர்களது உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்ட தலைநகரங்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் அதிகளவில் செல்லக்கூடிய பகுதிகளை இணைக்கும் வகையில் அரசு சார்பில் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோன்று கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவ கல்லுாரிக்கு அரசு போக்குவரத்து கழகம் மூலம் அரசு மினி பஸ்கள் தொடர்ந்து இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பயணிகள் நிழற்குடை தேவை



இதற்கிடையே மருத்துவமனைக்கு முன்பும், ரோடுமாமந்துார் பஸ் நிறுத்தத்திலும், நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் எப்போதும் அதிகமாகவே காணப்படுகிறது. மருத்துவமனைக்கும் செல்லும் நோயாளிகள், அவரது உறவினர்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.

அங்கு பயணிகள் நிழற்குடை இன்மையால் திறந்த வெளியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வெயில் மற்றும் மழையின் போது நோயாளிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக வயது முதிர்ந்தோர் வெயிலில் காத்திருக்கும் போது மயக்க நிலைக்கு ஆளாகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'போதிய பஸ் வசதி இல்லாததால், பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால், மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள் உள்ளிட்டோரின் நலன் கருதி போதிய பஸ் வசதிகளுடன், பயணிகள் நிழற்குடையும் அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.

Advertisement