பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு

13


ஸ்ரீநகர்: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு ஏற்படுகிறது. அதேநேரத்தில் ஒரு குதிரைக்கு ஒரு நாள் செலவு ரூ.400 ஆகிறது என உரிமையாளர்களை தங்களது கஷ்டத்தை தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் ஏப்ரல் 22ம் தேதி நடத்திய தாக்குதலில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் ஒருவர் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் குதிரை சவாரி தொழில் செய்த வந்த உள்ளூர்வாசியான சையத் அடில் ஹூசேன் ஷா.



தற்போது, பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகள் வருகை சரிந்துள்ளது. பஹல்காமில் உள்ள 6,000 குதிரைகளில், 100 குதிரைகளுக்கு மட்டுமே வேலை உள்ளது. மீதமுள்ள 5,900 குதிரைகள் வேலையில்லாமல் சும்மா இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் குதிரை ஓட்டி மற்றும் குதிரை உரிமையாளர்கள் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.


இதனால், பஹல்காமில் உள்ள குதிரை உரிமையாளர்கள் ஒவ்வொரு நாளும் ரூ.2 கோடி இழப்பை சந்தித்து வருகின்றனர். வழக்கமாக, சீசனில், குதிரை உரிமையாளர்கள் ஒரு குதிரைக்கு ரூ.3,000 சம்பாதிப்பார்கள். ஒரு குதிரையின் விலை ரூ.1 லட்சம். ஒரு குதிரை ஐந்து வயது முதல் 18 வயது வரை வேலை செய்யலாம்.

ரூ.400 செலவு




ஒரு குதிரைக்கு உணவு மற்றும் தண்ணீருக்கான குறைந்தபட்ச செலவு ஒரு நாளைக்கு ரூ.400 ஆகிறது. அதேநேரத்தில், குதிரையின் வயது அதிகரிக்கும் போது, ​​அதன் சிகிச்சைக்கான செலவு அதிகரிக்கிறது. சில நேரங்களில் இந்த செலவு ஒரு நாளைக்கு ரூ.1,500 ஆக உயரும்.


பஹல்காமில் ஐந்து குதிரை ஆபரேட்டர் சங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு நபரும் இரண்டு குதிரைகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். பஹல்காமில் இருந்து பைசரன் பள்ளத்தாக்குக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல குதிரை வீரர்கள் ரூ.1,300 வசூலிக்கிறார்கள்.


பஹல்காமில் வசிக்கும் 1 லட்சம் உள்ளூர் மக்கள் குதிரைகளில் இருந்து வருமானத்தை நம்பி வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement