மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்

மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரிசனம் செய்தார்.

பா.ஜ., மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்க நேற்று முன்தினம் இரவு தனி விமானத்தில் அமித்ஷா மதுரை வந்தார். ரிங் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியவர், நேற்று காலை 11:52 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. அம்மன், சுவாமி சன்னதிகளில் சிறப்பு அர்ச்சனை செய்தார். முப்பது நிமிடங்களுக்கு பின் மதியம் 12:22 மணிக்கு அங்கிருந்து சென்றார்.

இதுகுறித்து தனது 'எக்ஸ்' தளத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் பூஜை செய்ததில் மகிழ்ச்சி. நாட்டின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும், நம் குடிமக்களின் நல்வாழ்விற்கும் அன்னையின் ஆசிகளைப் பெற்று பிரார்த்தனை செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் முருகன், பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நகர் தலைவர் மாரி சக்கரவர்த்தி உடன் சென்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் தன் மடத்தில் காத்திருந்த மதுரை ஆதினத்தை பார்த்ததும் காரை விட்டு இறங்கினார். அவருக்கு ஆதினம் காவி நிற சால்வையை அணிந்தார். மடத்தின் சார்பில் வெளியிடப்படும் தமிழாகரன் இதழ், திருஞானசம்பந்தரின் புத்தகத்துடன், மனு ஒன்றையும் அமித்ஷாவிடம் ஆதினம் வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட அமித்ஷா நன்றி தெரிவித்துக்கொண்டு கோயிலுக்கு சென்றார்.

ஆதினம் கூறுகையில், ''அமித்ஷாவை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கையில் இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும். இந்திய மீனவர்கள் பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும் என கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தேன். நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்,'' என்றார்.பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த போது தன் மடத்திற்கு வெளியே காத்திருந்து மதுரை ஆதினம் சந்தித்து பொன்னாடை அணிவித்தார்.

Advertisement