குடிநீர் பிரச்னையால் காலி குடங்களுடன் சாலை மறியல்

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே குடிநீர் பிரச்னையால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மின் மோட்டார் பழுதாதனால் கடந்த சில தினங்களாக, குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் மா.கம்யூ., கட்சியினர் நேற்று மதியம் 12:00 மணிக்கு, கள்ளக்குறிச்சி-சங்கராபுரம் சாலையில், கொசப்பாடி கிராமத்தில் காலி குடங்களுடன் 'திடீர்' சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம், மின் மோட்டார் பழுதை உடனடியாக சரிசெய்து குடிநீர் வழங்க, நடவடிக்கை எடுப்பதாக, உறுதி அளித்தனர். இதையடுத்து, 1:00 மணிக்கு, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement