கூடுதல் ஜி.எஸ்.டி., வரி வசூலிக்க கூடாது: வீட்டுவசதி வாரியத்திற்கு ஐகோர்ட் 'குட்டு'

சென்னை: 'வீடு விற்பனையில் முறையான அறிவிப்பின்றி கூடுதலாக, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., செலுத்தும்படி, தமிழக வீட்டுவசதி வாரியம் நிர்ப்பந்திக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நந்தனம் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில், 2021ம் ஆண்டு உயர் வருவாய் பிரிவினருக்கான இரண்டு குடியிருப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்பை, தமிழக வீட்டுவசதி வாரியம் வெளியிட்டது.
நந்தனத்தில் 102, அண்ணா நகரில், 72 குடியிருப்புகள் கட்டப்பட்டன. வீட்டின் விலையுடன் ஜி.எஸ்.டி., உள்ளிட்டவற்றை, வீட்டு வசதி வாரியம் விளம்பரம் செய்தது. இந்த திட்டங்களில் வீடு வாங்கியவர்கள் அறிவிப்பில் வெளியிட்ட விலையை, பல்வேறு தவணைகளில் செலுத்தினர்.
இதையடுத்து, கூடுதலாக 5 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்தும்படி வீட்டு வசதி வாரியம், 'நோட்டீஸ்' அனுப்பியது. இந்த அறிவிப்பை அடுத்து, ஒதுக்கீடு பெற்றவர்களில் சிலர் கூடுதலாக கோரிய, 5 சதவீத ஜி.எஸ்.டி., வரியை செலுத்தினர். கூடுதலாக கோரிய வரியை செலுத்த மறுத்த ஒதுக்கீடுதாரர்கள் ஹம்சா சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:
தமிழக வீட்டுவசதி வாரியம் வெளியிட்ட விளம்பரத்தில், வீட்டின் விலை, ஜி.எஸ்.டி.,-யையும் உள்ளடக்கியது என, வெளிப்படையாக கூறப்பட்டு உள்ளது. அத்துடன், ஒதுக்கீட்டு கடிதத்திலோ அல்லது வாரியம் - ஒதுக்கீடுதாரர் இடையேயான ஒப்பந்தத்திலோ, இதற்கு முரணாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
விளம்பரத்தில் நந்தனம் திட்டத்தில் சதுர அடிக்கு ஜி.எஸ்.டி., சேர்த்து, 9,462 ரூபாய்; அண்ணா நகர் திட்டத்தில் ஜி.எஸ்.டி., சேர்த்து, சதுர அடிக்கு 10,500 ரூபாய் என்று தான் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வாரியத்தின் வரி திட்டமிடல் பிழைகளுக்கு, வீடு வாங்கியவர்களை பொறுப்பேற்க வைக்க முடியாது. அறிவிப்பில் அளித்த வாக்குறுதியை வாரியம் மீறியதோடு, மேலாதிக்க நிலையில் செயல்படுவதையே காட்டுகிறது.
எனவே, வீடுக்கான விற்பனை விலையை செலுத்திய அனைத்து மனுதாரர்களுக்கும், எட்டு வாரங்களுக்குள் வீட்டுவசதி வாரியம் விற்பனை பத்திரத்தை வழங்க வேண்டும். கூடுதலாக, 5 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்தியவர்களுக்கு, அந்த தொகையை வாரியம் திருப்பி தர வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



மேலும்
-
காசாவுக்கு சென்ற கப்பலை சிறைபிடித்த இஸ்ரேல்: மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது
-
பாகிஸ்தான் கழுதைக்கு 'டிமாண்ட்' ரூ.2 லட்சமாக விலை உயர்வு
-
அதிகாலை பயணத்தால் தொடரும் விபரீதம்; நெடுஞ்சாலையில் கார்- வேன் மோதி 12 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்