மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலி

திண்டிவனம் : திண்டிவனத்தில் தாத்தாவின் கருமகாரியத்திற்கு காய்கறி வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற பேரன் மீது வாகனம் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.

திண்டிவனம் அருகே உள்ள தென்சிறுவளூர் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த நாவப்பன் மகன் அஜித்குமார், 25; இவருடைய தாத்தா கருமகாரியத்திற்காக நேற்று காலை தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த மாரி மகன் மணி 24; என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் சென்றார்.

காய்கறி, மளிகை பொருட்களை வாங்கிகொண்டு, இருவரும் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு திண்டிவனத்திலிருந்து கிராமத்திற்கு திரும்பினர்.

திண்டிவனம் ஜெயரபுரம் ரவுண்ட்டான அருகே பைக் வந்தபோது, எதிரே புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த டாடா ஏஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த இருவரும், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் அஜித்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். மணி சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து திண்டிவனம் டவுன் போலீசார் வேன் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement