நிறைவு பெற்றது ராஜ்யசபா தேர்தல் வேட்பு மனு தாக்கல்: நாளை மனுக்கள் பரிசீலனை

சென்னை: ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது.



ராஜ்ய சபா எம்.பி.,க்களில் தி.மு.க.,வைச் சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.,வில் வைகோ, அ.தி.மு.க.,வில் சந்திரசேகரன், பா.ம.க.,வில் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.


இதை தொடர்ந்து, புதிய 6 ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்யும் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஜூன் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான மனு தாக்கல் ஜூன் 2ல் தொடங்கியது.


தி.மு.க.,வில் வக்கீல் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு ஜூன் 6ம் தேதி மனு தாக்கல் செய்தனர். தி.மு.க., கூட்டணியான மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் மனு தாக்கல் செய்தார்.


அ.தி.மு.க., வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட இன்பதுரை, தனபால் ஆகியோரும் மனுக்களை தாக்கல் செய்தனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மனு தாக்கல் இன்று (ஜூன் 9)மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது.


ராஜ்ய சபா தேர்தலுக்காக மொத்தம் 13 பேர் 17 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இவர்களில் தி.மு.க., சார்பில் 4 பேர், அ.தி.மு.க., சார்பில் 2 பேர், சுயேட்சைகள் 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.


நாளை (ஜூன் 10) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்க உள்ளது. ஜூன் 12ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம்.

Advertisement