மணிப்பூரில் ரூ.55.52 கோடி ஹெராயின், ரொக்கம் பறிமுதல்: 5 பேர் கைது

இம்பால்: மணிப்பூரில் சுங்கத்துறை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய சோதனையில், 55.52 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
மணிப்பூரில், பழங்குடியின அமைப்பின் தலைவரை பாதுகாப்பு படையினர் கைது செய்ததை கண்டித்து, அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதற்கிடையே பல்வேறு பகுதியில் போதை பொருட்கள் கடத்தல் நடந்து வருவதாக தகவல் கிடைத்தது.
மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில்,ஜூன் 5ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை சுங்கத்துறை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கையில் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ரூ.54.29 கோடி மதிப்புள்ள 7,755.75 கிராம் ஹெராயின் மற்றும் ரூ.87.57 லட்சம் மதிப்புள்ள 6,736 கிராம் ஓபியம் மீட்கப்பட்டன. ரூ.35.63 லட்சம் ரொக்கம், இரண்டு வாக்கி டாக்கிகள் மற்றும் ஒரு மாருதி ஈகோ வேன் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த கடத்தல் சம்பவத்தில் அவர்களுக்கு வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
