மதுரை - துாத்துக்குடி சுங்க சாலை: கட்டணம் வசூலிக்க தடை இல்லை

மதுரை -- துாத்துக்குடி இடையே உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.


துாத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:


மதுரை- - துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையின் சாலையோரம் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவில்லை; இரவு நேர விபத்துகளை தடுக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படி அடிப்படையான வேலைகள் எதையும் செய்யாமல் சுங்கச்சாவடி அமைத்து, கட்டணங்களை மட்டும் வசூலித்து வருகின்றனர்.


இந்த வேலைகளை எல்லாம் செய்த பின் தான், எலியார்பட்டி சுங்கச்சாவடி மற்றும் துாத்துக்குடி புதுார் பாண்டியபுரம் சுங்கச்சாவடி நிர்வாகம் ஆகியவை சுங்க கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


இது குறித்து விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, குறிப்பிட்ட இந்த இரண்டு சுங்கச்சாவடிகளிலும் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவிட்டது.



இதை எதிர்த்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.


மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'எந்த விதமான பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளாமல், கட்டணம் வசூல் செய்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இந்த சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன' என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.


மேல்முறையீடு மனு தொடர்பாக எதிர்மனுதாரர் பாலகிருஷ்ணன் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.




- டில்லி சிறப்பு நிருபர் -

Advertisement