மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு

சின்னசேலம் : சின்னசேலம் அருகே மாடு மேய்த்த மூதாட்டியின் தாலிச் செயின் மற்றும் தோடு ஆகியவற்றை பறித்துச் சென்ற பெண் உட்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சின்னசேலம் அடுத்த தீர்த்தாபுரம், கட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மனைவி பெரியம்மாள், 65; இவர், நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் தீர்த்தாபுரம் அருகே உள்ள வயல்வெளியில் தனது ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, பைக்கில் பெண் ஒருவருடன் வந்த மர்ம நபர் வழி கேட்பது போல் பெரியம்மாளிடம் பேச்சு கொடுத்து, திடீரென பெரியம்மாளை கீழே தள்ளி, அவரை தாக்கி 4 சவரன் தாலிச் செயின் மற்றும் அரை சவரன் தோடு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்த புகாரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement