புதுச்சேரியின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் ரங்கசாமி அட்வைஸ்

புதுச்சேரி, : அதிகாரிகள் தொழில்நுட்ப வளர்ச்சியை, புதுச்சேரியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தினார்.

தேசிய இ-விதான் செயலி துவக்க விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

நாட்டில் தொழில் நுட்பமும், தகவல் தொழில் நுட்பமும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார். அதனடிப்படையில் தற்போது, காகித பயன்பாடு குறைவு, கணினி செயல்பாடு வேகம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி நம்நாட்டை விரைவாக வளர்ச்சி அடைந்த நாடாக கொண்டுவர முடியும்.

புதுச்சேரி சட்டசபையில் காகித பயன்பாடு குறைத்து, கணினி மயமாக்கப்பட்ட நிலையில், அதன் செயல்பாடுகள் விரைவாக இருக்கிறது. எம்.எல்.ஏ.,க்களுக்கு கூட சமீபத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு, எல்லோருக்கும் தேவையான கணினி வழங்கப்பட்டுள்ளது. கணினி மூலம் துறைகளின் இணைப்பு மற்றும் அதன் செயல்பாடு எவ்வளவு தேவை என்பதை நாம் உணர்ந்து இருக்கின்றோம்.

தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தால்தான் நாடு வேகமான வளர்ச்சி பெற முடியும். என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், செயல்பாட்டில் விரைவான செயல்பாடு இருக்க வேண்டும்.

ஆகையால், அனைத்து துறைகளின் செயலர்கள், அதிகாரிகள் விரைந்து செயல்படுத்தி, இந்த தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை முழுவதுமாக புதுச்சேரியின் வளர்ச்சிக்கு கொண்டுவர வேண்டும் என்பது தான் எனது எண்ணம். அதன் அடிப்படையில் நீங்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.

Advertisement