ராமநாதபுரம் அருகே கார், வேன் மோதல்: சிறுமி உட்பட இருவர் பலி

ராமநாதபுரம், : ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் காரும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கீழக்கரையை சேர்ந்த ஐ.டி., ஊழியரும், புதுமாப்பிள்ளையுமான வெங்கடேஸ்வரன், விருத்தாச்சலம் காட்டுப்பரூரைச் சேர்ந்த சிறுமி மகாலட்சுமி பலியாகினர்.

கடலுார் மாவட்டம் விருத்தாச்சலம் காட்டுப்பரூரைச் சேர்ந்த 22 பேர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வேனில் வந்தனர். விருத்தாச்சலம் ராஜூ மகன் சிவக்குமார் 28, ஓட்டிவந்தார்.

எதிர்புறத்தில் ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி 4 நண்பர்களுடன் காரில் கீழக்கரையை சேர்ந்த ஐ.டி., ஊழியரான வெங்கடேஸ்வரன் 27, வந்தார். வெங்கடேஸ்வரனுக்கு அடுத்த வாரம் திருமணம் நடக்கவிருந்தது.

இந்த இருவாகனங்களும் அதிகாலை 4:00 மணிக்கு நதிப்பாலம் ஸ்டாப் அருகே ராமேஸ்வரம் ரோட்டில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் காரை ஓட்டி வந்த வெங்கடேஸ்வரன், வேனில் வந்த காட்டுப்பூர் சத்யா மகள் மகாலட்சுமி 12, சம்பவ இடத்தில் பலியாகினர்.

2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உச்சிப்புளி போலீசார் காயமடைந்த 24 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் பயணித்த தஞ்சாவூரை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் பழனிவேல் 21, உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். வேன் டிரைவர் சிவக்குமார் உட்பட 23 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்த வெங்கடேஸ்வரன் மீது உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement