'ஆக்மி 2025' இயந்திர கருவிகள் கண்காட்சி சென்னையில் ஜூன் 19 முதல் நடக்கிறது

சென்னை : அம்பத்துார் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கமான ஏ.ஐ.இ.எம்.ஏ., 'ஆக்மி 2025' என்ற பெயரில் இயந்திர கருவிகள் கண்காட்சியை, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடத்துகிறது. இதில், பல நாடுகளின் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இது குறித்து, சங்கத்தின் தலைவர் சதீஷ்பாபு கூறியதாவது:

அம்பத்துார் தொழிற்பேட்டையில் 2,000 தொழில் நிறுவனங்களும், தொழிற்பேட்டையை சுற்றி 5,000 நிறுவனங்களும் செயல்படுகின்றன. அவற்றின் வாயிலாக ஆண்டுக்கு, 20,000 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. அதில், 30 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆக்மி 2025 கண்காட்சி, மாறி வரும் வணிக சூழலின் பின்னணியில் நடத்தப்படுகிறது.

இதன் வாயிலாக, தொழில் துறையில் வலுவான ஆர்வம் ஏற்படும். தொழில்முனைவோரும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களும், உலகளவில் இயந்திர கருவிகள் மற்றும் உற்பத்தி தொழில்நுட்பங்களில் ஏற்பட்டு வரும் நவீன முன்னேற்றங்களை தெரிந்து கொள்ள முடியும்.

கடந்த 2023ல் நடந்த கண்காட்சியில், 600 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்தது. இந்தாண்டு, 750 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயந்திர கருவிகள், லேசர் தொழில்நுட்பம், தொழிற்சாலை ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தொழில் துறையினர் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

 கடந்த 1994 முதல், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆக்மி கண்காட்சி நடத்தப்படுகிறது

 இதன் 16வது கண்காட்சி வரும் 19ல் துவங்கி 23ம் தேதி வரை நடக்கிறது

 நவீன இயந்திர கருவிகள், தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படும்

 இந்தாண்டு கண்காட்சியில், 468 நிறுவனங்கள் பங்கேற்கின்றன

 கண்காட்சியில் வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படும்.

Advertisement