தொழிற்சாலையில் தீ விபத்து

புதுச்சேரி : காலாப்பட்டு தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி காலாப்பட்டு மாத்தூர் ரோட்டில் இயங்கி வரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் நேற்று மதியம் 1:30 மணி அளவில் புகை மூட்டத்துடன் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

அதிர்ச்சியடைந்த சுனாமி குடியிருப்பு பகுதி மக்கள், தொழிற்சாலை முன் திரண்டனர். அவர்களை சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். உடன், கிராம மக்கள் இந்த தொழிற்சாலையில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தாசில்தார் செந்தில்குமரன் மற்றும் தொழிற்சாலை ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தொழிற்சாலைக்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அதில், தொழிற்சாலையில் வைத்திருந்த சோடியம் என்ற ரசாயன பொருள் திடீரென தீ பிடித்து எரிந்ததும், உடன் அங்கிருந்த ஊழியர்கள் தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை அணைத்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அதிகாரிகள், கிராம மக்களிடம் தெரிவித்து விபத்து குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement