சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் தேரோட்டம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் மண்டகப்படியாக தினமும் சுவாமி வீதி உலா நடந்தது.

ஜூன் 5 ல் திருக்கல்யாணம், 6 ல் கழுவன் திருவிழா நடந்தது. 9ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 9:30 மணிக்கு பூரணை, புஷ்கலை தேவியருடன் சேவுகப்பெருமாள் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேரில் ஏறி சுவாமியை வழிபட்டனர்.

மதியம் 3:30 மணிக்கு சந்திவீரன் கூடத்தில் இருந்து நாட்டார்கள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து,மதியம் 3:50 மணிக்கு தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. 4:30 மணிக்கு கழுவன் கழுவச்சி சிலைகள் மீது பாரம்பரிய முறைப்படி தேர் சக்கரம் ஏறியது. இதைத் தொடர்ந்து 5:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. அப்போது பக்தர்கள் ஏராளமான தேங்காய்களை தேரடிப்படியில் வீசி உடைத்தனர்.

தொடர்ந்து தேரடி பூஜை நடந்தது. தேரோட்டத்தையொட்டி காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது.

நான்கு ரத வீதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

சிவகங்கை எஸ்.பி., தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். திருவிழாவின் பத்தாம் நாளான இன்று இரவு பூப்பல்லக்கு உற்ஸவம் நடைபெறுகிறது.

Advertisement