அனைத்து மகளிர் ஆலையாகிறது; செய்யாறு என்பீல்டு தொழிற்சாலை

சென்னை : திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் அமைந்துள்ள ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில், பெண்கள் மட்டும் உற்பத்தி செய்யும் பிரத்யேக உற்பத்தி தடம் உள்ளது.

இந்நிலையில், இந்த ஆலையை அனைத்து பெண்கள் ஆலையாக மாற்ற உள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.

அவரின் சமூக வலைதள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

என்பீல்டு நிறுவனத்தின் செய்யாறு ஆலையில், அனைத்து பெண்கள் உற்பத்தி தடத்தை உருவாக்கி உள்ளோம். இந்த ஆலையில், 100 சதவீதம் பெண்கள் மட்டுமே உற்பத்தி செய்யும் வகையில், அனைத்து பெண்கள் ஆலையாக மாற்ற பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில், பெண்கள் 5 சதவீதம் மட்டுமே இருந்தனர். தற்போது அது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தின் வல்லம் ஆலையில், 26 சதவீதம் அளவுக்கு பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

பொறியியல் உற்பத்தியில் துவங்கி சந்தைப்படுத்துதல் மற்றும் இதர வணிக பிரிவுகளில் பெண்கள் பணியாற்றி, என்பீல்டு நிறுவனத்தின் எதிர்காலத்தை உருமாற்றி வருகின்றனர்.

கடந்த நிதியாண்டில் நியமிக்கப்பட்ட புதிய பணியாளர்களில் 24 சதவீதம் பேர் பெண்கள். இது, கடந்த நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், கட்டுமான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் ஸ்விங் ஸ்டெட்டர், அசோக் லேலாண்ட், எல்.ஜி., எக்யுப்மென்ட்ஸ், ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள், வாகன மற்றும் இயந்திர உற்பத்தியில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகின்றன.

நாடு முழுதும் உற்பத்தி துறையில் பணியாற்றி வரும் பெண்களில், 43 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர்.

Advertisement