தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை ஹிந்து முன்னணி மாநில தலைவர் குற்றச்சாட்டு

பழநி: ''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை.போதைப் பொருட்கள் எளிதாக மாணவர்கள் கையில் கிடைக்கிறது'' என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டினார்.

பழநி திருஆவினன்குடியிலிருந்து புலிப்பாணி ஆசிரமத்திற்கு அவர் ஊர்வலமாக வேல் எடுத்து வந்தார். அங்கு வேலுக்கு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த அவர் கூறியதாவது: மதுரையில் ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு அழைப்பு விடுக்க முதல்வர் ஸ்டாலினிடம் நேரம் கேட்டுள்ளோம்.

தமிழக அரசு சார்பில் பழநியில் முருகன் மாநாடு நடத்தப்பட்டது. அது தி.மு.க., மாநாடு போல் இருந்தது. சேகர் பாபு பயந்து உளறுகிறார்.

ஹிந்துக்கள் மத்தியில் எழுச்சி உருவாகி உள்ளது. சென்னிமலையில் துவங்கிய ஹிந்துக்கள் எழுச்சி கடவுள் இல்லை என சொல்பவர்களுக்கு மதுரையில் முடிவுரையை எழுதும். கடவுள் இல்லை எனக் கூறும் கட்சிகள் எதிர்ப்பதால் ஹிந்துக்கள் பலம் அதிகரிக்கிறது. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வர உள்ளனர். ஆறுபடை வீடுகளில் இருந்து வேல் எடுத்து வந்துள்ளேன். மதுரை மாநாட்டில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது ஆறுபடை வீடுகளின் மாதிரிகள் செய்யப்பட்டு மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்த மாநாடு தமிழகத்தில் திருப்புமுனையாக அமையும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் குடும்பத்தில் மூன்று பேர், நான்கு பேர் கொல்லப்படுகின்றனர். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கூட போதை பொருட்கள் எளிதாக கிடைக்கிறது.

ஹிந்துக்களுக்கு விரோதமாக பேசுபவர்கள் 2026 க்கு பின் காணாமல் போவார்கள். ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருப்பது என்பது மத கலவரத்தை துாண்டுவது அல்ல. பழநி அடிவாரப் பகுதியில் உள்ள வியாபாரிகளின் வாழ்வாரத்தை மேம்படுத்த சந்தை போன்று ஏற்படுத்தி தர வேண்டும். இது தொடர்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது என்றார்.

Advertisement