'முடா' முறைகேடு வழக்கில் ரூ.100 கோடி சொத்து முடக்கம்


மைசூரு, 'முடா' முறைகேடு வழக்கில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான 92 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், பயனாளிகளுக்கு, வீட்டுமனை ஒதுக்கியதில் நடந்த முறைகேடு பற்றி, அமலாக்கத்துறை விசாரிக்கிறது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 14 வீட்டுமனைகள் வாங்கியது தொடர்பாக, முதல்வர் சித்தராமையா மீதும் வழக்குப்பதிவு செய்து இருந்தது.

இந்நிலையில் அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: முதல்வர் சித்தராமையா, பலர் தொடர்புடைய, 'முடா' முறைகேடு தொடர்பாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரித்து வருகிறோம்.
தகுதியற்ற பயனாளிகளை அடையாளம் கண்டு, போலியான ஆவணங்கள் மூலம், அரசு உத்தரவை மீறி சட்டவிரோதமாக 'முடா' அதிகாரிகள் வீட்டுமனைகள் ஒதுக்கியுள்ளனர்.
இதற்காக முடாவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் வங்கிக்கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சட்டம், வழிகாட்டுதல்களை மீறி வீட்டுமனை ஒதுக்கீட்டில் பெரிய அளவில் மோசடி நடந்ததை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.
'முடா' முன்னாள் கமிஷனர் தினேஷ்குமார், பல அதிகாரிகள் தகுதியற்ற பயனாளிகளுக்கு வீட்டுமனை வழங்குவதற்கு முக்கிய பங்கு வகித்துள்ளனர். லஞ்சம், வங்கி மூலம் பணப்பரிமாற்றம், அசையும், அசையா சொத்துகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது 'முடா'விடம் இருந்து, 100 கோடி ரூபாய் மதிப்பிலான 92 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு, 300 கோடி ரூபாய் மதிப்பிலான, வீட்டுமனைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement