சமூகம், இசை, ஆன்மிக பணிகளில் சிறந்து விளங்கியோர்க்கு விருதுகள்

சமூகம், இசை, ஆன்மிகப் பணிகளில் சிறந்து விளங்கிய 6 பேருக்கு, மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவரின் 132வது ஜெயந்தி வைபவத்தை முன்னிட்டு, மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மூன்று நாள் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. மதுரை, எஸ்.எஸ்.காலனி பிராமண கல்யாண மண்டபத்தில், ஸ்ரீ மகா பெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளி பாதுகைக்கு அபிஷேக ஆராதனைகள், மகன்யாசம், ஹோமம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டன. பின்னர், பலதுறைகளில் சாதனைகள் செய்தவர்களுக்கு 'ஸ்ரீமகா பெரியவா விருது' வழங்கப்பட்டது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் விருதினை வழங்கி, வாழ்த்திப் பேசினார்.

தமிழ்நாடு பிராமண சமாஜம் மாநில தலைவர் ஹரிஹர முத்து ஐயர், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் புதூர் வி.ராமகிருஷ்ணன், பாகவதர் ஆய்க்குடி குமார், கர்நாடக இசைக்கலைஞர் ரங்கநாயகி சச்சிதானந்தம், வயலின் வித்துவான் நெல்லை ரவீந்திரன், இசை ஆசிரியை பிச்சம்மாள் ஆகிய 6 பேர் விருதுகள் பெற்றனர்.

பின்னர், ஸ்ரீ ஆய்க்குடி குமார் குழுவினரின் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிகள் நடந்தது. அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

Advertisement