கூட்டணியை நானே முடிவு செய்வேன்: ராமதாஸ் திட்டவட்டம்

சென்னை: வரும் 2026ம் ஆண்டு தேர்தல் வரை கட்சியின் தலைவராக நானே செயல்படுவேன்; தேர்தல் கூட்டணியை நானே முடிவு செய்வேன் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தைலாபுரத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்து பேசியுள்ளார்.
கேள்வி; நீயா? நானா? என்ற நிலைக்கு தீர்வே கிடையாதா?
பதில்; நான் அப்படித்தான் நினைக்கிறேன். இருவர்கள் வந்தார்கள். அவர்கள் எல்லாம் பெரிய ஜாம்பவான்கள். ஆனால், எனக்கு நல்ல பதில் வரவில்லை. தலைவர் பதவி வேண்டுமென்று சொல்கிறார். இந்த தேர்தல் முடிந்த பிறகு, அவர் தான் எல்லாம் பார்த்து கொள்ளப் போகிறார். அரசியலில் என்பதில் வாரிசு கிடையாது. நான் நினைத்தால் உங்களிடம் கூட கட்சியை கொடுத்து விட்டுச் செல்வேன்.
கேள்வி; ராமதாஸின் பேச்சை அன்புமணி கேட்காமல் இருப்பதற்கு பின்புலத்தில் பா.ஜ., உள்ளதா?
பதில்; யார் சொன்னாலும் அன்புமணி கேட்க மாட்டார். முயலுக்கு எத்தனை கால் என்று கேட்டால், அவர் 3 கால் என்று தான் சொல்வார். ஆனால், 4 கால் தான் என்று சொன்னால், பிரச்னையே முடிந்து விடும்.
கேள்வி; இத்தனை ஆண்டுகளாக நிறுவனராக இருந்து தேர்தலை சந்தித்த நீங்கள், தலைவராக இருந்து தேர்தலை சந்திக்க முயற்சிப்பது ஏன்?
பதில்; கட்சியை சரியாக வழிநடத்தவில்லை என்பதால் தான். 40 அல்லது 50 தொகுதிகளை எடுத்து வேலை செய்ய அவர் ஒத்துழைக்கவில்லை. நாம் 50 அல்லது 60 தொகுதிகளில் வலுவாக இருந்தால் தான் கூட்டணி பேச வருவார்கள். அப்போது தான் நானும், நமது கூட்டணியும் வெற்றி பெற முடியும். அதற்கு, அவர் தயாராக இல்லை. என்னிடம் இவர் (அன்புமணி) தருமபுரியில் நிற்க போகிறேன் என்று சொல்லி விட்டு அங்கே தான் நிற்கிறேன் என்றார். அதன் பிறகு சவுமியா போட்டியிடுவதாக தெரிவித்தார். நான் சொன்னேன், நம் குடும்பத்தில் பெண்கள் அரசியலுக்கு செல்லக் கூடாது என்று கூறினேன். அதன்பிறகு, கெஞ்சி கூத்தாடி என்னை கையெழுத்து போட வைத்து விட்டார்கள்.
கேள்வி; ஆடிட்டர் குருமூர்த்தி அன்புமணியிடம் பேசியுள்ளார்?
பதில்; ஆடிட்டர் குருமூர்த்தி என்னுடனும் பேசினார். அன்புமணியிடமும் பேசினார். என்னிடம் பேசிவிட்டு சென்னை வர சொன்னார். அங்கு சென்ற பிறகும் பேசினார்.
கேள்வி; பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை நீக்கம் செய்தது குறித்து
பதில்; பொதுச்செயலாளர் எங்கே இருக்கிறார் என்று ஊடகங்களுக்கு தான் தெரியும். அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. உங்கள் மூலம் தான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஏதாவது செவன் ஸ்டார் அல்லது பைவ் ஸ்டார் ஹோட்டலில் வெளிநாட்டு மதுபானம் வாங்கி அடித்துக் கொண்டிருக்கிறார். மிதக்கிறார். மிதக்கிறார் மிதந்து கொண்டே இருக்கிறார் என்று கேள்வி பட்டோம், எவ்வளவு தூரம் உண்மை தெரியவில்லை.
கேள்வி; உட்கட்சி மோதல் காரணமாக தொண்டர்கள் சோர்வடைந்து இருப்பார்களே?
பதில்; அவர்கள் தொண்டர்கள் கிடையாது. மக்களுக்கு தொண்டு செய்கின்ற அவர்கள், வணங்கக் கூடிய தெய்வங்கள்.
கேள்வி; பாலுவுக்கு பதிலாக நியமிக்கப்பட்டவர் கோபு தகுதியற்றவர் என்று அன்புமணி கூறியிருக்கிறாரா?
பதில்; வழக்கறிஞர் சமூகநீதி பேரவையை மாற்றியுள்ளோம். இவர் சரியில்லை என்று தான் அவரை மாற்றினோம்.
கேள்வி; பா.ம.க., மூத்த நிர்வாகி பாலுவை மாற்றியது ஏன்?
பதில்; இதற்கு முன்பு சமூக நீதி பேரவை இருந்தது. இவரை விட திறமையானவர்கள் இருந்துள்ளார்கள். அவர்கள் மாற்று கட்சிக்கு சென்று விட்டார்கள். அவர்கள் இன்னமும் என் மீது பாசத்துடன் இருக்கின்றனர்.
கேள்வி; 2026க்குப் பிறகு கட்சி அன்புமணியிடம் செல்லுமா?
பதில்; 2026ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு அனைத்தும் அவரிடமே செல்லட்டும். இது வெறும் தலைவர் பதவி தான். இதை நிறுவிய நான், எந்தக் காலத்திலும் அமைச்சர் பதவிக்காக நான் செல்ல மாட்டேன். நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்டினேன். அந்தக் கூட்டத்தில் ஒருவர் இவரை (அன்புமணி) லேசாக விமர்சித்தார். அது நல்ல விமர்சனம். அப்போது, அன்புமணி அவர் மீது பாய்ந்தார். துப்பாக்கி இருந்தால் அவரை சுட்டிருப்பார். அந்தளவுக்கு பாய்ந்தார். அதன்பிறகு, மற்றவர்கள் பயந்து கருத்து சொல்லவில்லை. அப்போது, நான் சொன்னேன், நம்ம தலைவருக்கு (அன்புமணி) தலைமைப் பண்பு இல்லை என்று பகிரங்கமாக கூறினேன். யாரிடமும் செல்போனில் பேசமாட்டார். இப்போது தான் கூவி கூவி அழைக்கிறார்.
கேள்வி; பணம் வாங்கி கொண்டு மாவட்ட செயலாளர்கள் பொறுப்பு வழங்கப்படுவதாக அன்பழகன், ஜி.கே. மணி மீது குற்றச்சாட்டை வைக்கிறார்கள்?
பதில்; அன்பழகன் பணம் வாங்கி கொண்டு, சிங்கப்பூர், அமெரிக்கா எனற வெளிநாடுகளுக்கு சென்று வருவதாக சொல்கிறார்கள். அப்புறம் பார்த்தால் இங்க தான் இருக்கிறார். அவரிடம் தான் கேட்க வேண்டும்.
கேள்வி; இனி அன்புமணியுடன் பேச்சுவார்த்தை இருக்குமா? இருக்காதா?
பதில்; ஒரே தீர்வு தான். என்னை செயல் தலைவராக இருங்கள் என்று என் தந்தை சொன்னார் என்று கூறி, அந்தப் பொறுப்பில் செயல்படுவேன். அந்தப் பதவியும் வேண்டாம், சாதாரண தொண்டனாக அவர் காட்டும் வழியில் செல்வேன் என்று செல்வேன் என்று கூற வேண்டும். ராமாயணத்தில் ராமரை காட்டுக்கு வனவாசம் போகச் சொல்லி, அவரது தந்தை தசரத சக்கரவர்த்தி கூறுகிறார். அப்போது, ராமரின் முகம் அன்று மலர்ந்த தாமரை போல் இருந்ததாக கம்பர் வர்ணித்துள்ளார். இப்படித்தான் அன்புமணியும் இருந்திருக்க வேண்டும்.
கேள்வி; பேச்சுவார்த்தை சரிபட்டு வராவிட்டால் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவிர்களா?
பதில்; அதனை செய்ய மாட்டேன்.
கேள்வி; தலைவர் மாற்றப்பட்டதாக முறைப்படி தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டதா?
பதில்; இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்பதால், நாங்கள் இன்னும் அந்த நடவடிக்கையை எடுக்கவில்லை.
கேள்வி; நிர்வாகிகளை நீக்க ராமதாஸூக்கு அதிகாரம் இல்லை என்கிறார்களே?
பதில்; நான் தான் நிறுவனர், தலைவர். ஓட்டுப்போடும் மக்கள் அனைவரும் என் பக்கத்தில் தான் இருக்கிறார்கள். எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. எனக்கு நாட்டு மக்கள் தான் முக்கியம். பா.ம.க., ஒரு ஜாதி கட்சி கிடையாது. தமிழகத்தில் உள்ள 324 ஜாதிக்கும் சம உரிமை, சமூக நீதி, கல்வி பெற வேண்டும் என்பதே நோக்கம்.
கேள்வி; குருமூர்த்தி சமரசம் பேச சென்ற அ.தி.மு.க., நான்காக உடைந்தது போல பா.ம.க., உடைந்து விடுமோ என்று தொண்டர்கள அச்சப்படுகிறார்கள்?
பதில்; உங்களுடைய நல்ல எண்ணம் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
கேள்வி; 10.5 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக தொலைபேசியில் பேசிய போது அன்புமணி அழுதாரே?
பதில்; அதுக்காக எதற்கு அழ வேண்டும். நான் போய் அரைமணி நேரம் ஒரு வகுப்பே நடத்தினேன். முதல்வர், அமைச்சர்கள், செயலாளர்கள் இடையே சமூக நீதி பற்றியும், ஜாதி வாரி கணக்கெடுப்பு மற்றும் 10.5 சதவீத இடஒதுக்கிடு பற்றி தான்.
கேள்வி; பா.ம.க., கூட்டணி பற்றி யாரிடம் பேச வேண்டும்?
பதில்; பா.ம.க.,வுடன்கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு நல்லது, கெட்டது எது என்பது அவர்களுக்கு தெரியும்.
கேள்வி; பா.ம.க., பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பதவிகாலம் குறித்த கேள்விக்கு,
பதில்; பா.ம.க., பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பதவி காலம் 3 ஆண்டு காலம் நிறைவடைந்தது. பொதுக்குழுவை முடிவு செய்வது குறித்து நிறுவனர் முடிவு செய்வார்.
கேள்வி; கூட்டணி குறித்து யார் முடிவு செய்வார்?
பதில்; கூட்டணி குறித்து நான் தான் முடிவு செய்வேன். அந்தக் காலத்தில் தி.மு.க.,வுடனான கூட்டணி. 6 மாதத்திற்கு முன்பு கருணாநிதியை சந்திப்பேன். தொகுதி உடன்பாடு குறித்து கையெழுத்து போடுவோம். ஆனால், செய்தியாளர்கள் கேட்டால், வழக்கமான சந்திப்பு என்று தான் கூறுவோம். ஆனால், 6 மாதத்திற்கு முன்பே கூட்டணி, தொகுதி உடன்பாடு எல்லாம் முடிவு செய்து விடுவோம்.
கேள்வி; இளைஞரணி தலைவர் எப்போது நியமிக்கப்படுவார்?
பதில்; எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. நல்ல ஜோதிடரை சொன்னீர்கள் என்றால், என்னதான் சொல்கிறார் என்று தெரிந்து கொள்வேன்.
கேள்வி; த.வெ.க.,வுடன் கூட்டணியா?
பதில்; இதுவரையிலும் த.வெ.க.,வுடன் கூட்டணி இல்லை. மூத்த தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு செய்வோம், இவ்வாறு அவர் கூறினார்.
கேள்வி; சமூக நீதி பேசும் நீங்கள் பெண்கள் (சவுமியா) அரசியலுக்கு வர எதிர்ப்பு ஏன்?
பதில்; ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழக அரசியலில் உள்ள தலைவர்களின் குடும்பத்தில் ஏதேனும் பெண் தலைவர்கள் அரசியலுக்கு வந்தார்களா? விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு தான் அவரது மனைவி அரசியலுக்கு வந்துள்ளார், எனக் கூறினார்.










மேலும்
-
ஜூன் 15ம் தேதி கல்லணையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை: விமான விபத்தில் தப்பிய விஸ்வாஸ் பேட்டி
-
டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசர தரையிறக்கம்!
-
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்; இஸ்ரேல் - ஈரானுக்கு இந்தியா வலியுறுத்தல்
-
போலி பால் தயாரித்து விற்பனை: தென்காசி அருகே 3 பேர் கைது!
-
லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாப பலி: நீதிபதி காயம்