ஆன்லைனில் பட்டா பதிவேற்றம் மக்கள், நிர்வாகத்திற்கு உதவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மதுரை : பட்டா மற்றும் சிட்டாக்களை ஆன்லைனில் பதிவேற்றுவதால் மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என அறிவுறுத்திய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரம் தொடர்பான பட்டா, சிட்டாக்களை பதிவேற்றுவதை விரைவுபடுத்த உத்தரவிட்டது.


ரவணசமுத்திரத்தை சேர்ந்த சிவயக்னேஷ் தாக்கல் செய்த மனு:ரவணசமுத்திரம் தொடர்பான பட்டாக்கள், சிட்டாக்களை தமிழக அரசின் ஆன்லைன் பட்டா போர்ட்டல், 'தமிழ் நிலம்' போர்ட்டலில் குறித்த காலவரம்பிற்குள் பதிவேற்றம் செய்ய தமிழக வருவாய்த்துறை, பதிவுத்துறையின் முதன்மைச் செயலர்கள், நில நிர்வாக கமிஷனர், கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.



நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு அளித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:


ஆன்லைனில் பதிவேற்றும் நடைமுறை துவங்கி இன்னும் முடிவடையவில்லை என்பதை மனுதாரரே ஒப்புக்கொண்டுள்ளார். தென்காசி தாசில்தார், 'பிழைகள் திருத்தம், ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் முடிக்க 4 மாதங்கள் ஆகும்,' என பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.பட்டா மற்றும் சிட்டாக்களை ஆன்லைனில் பதிவேற்றுவதை இயன்றவரை விரைவாக முடிக்க வேண்டும் என்பதை குறிப்பிடத் தேவையில்லை. ஏனெனில் பதிவேற்றுவது மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்.தாசில்தார் தெரிவித்துள்ள காலவரம்பிற்குள் ஆன்லைனில் பதிவேற்றும் நடைமுறையை அதிகாரிகள் விரைவுபடுத்த வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement