ஏரியில் பேருந்து நிலையம் ஏன்? வெள்ளி விழாவில் பொன்முடி விளக்கம்

11

விழுப்புரம்: நீர்நிலையை ஆக்கிரமித்து, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதற்கு, பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் எவ்வித விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை.


புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, 25 ஆண்டுகள் கடந்த நிலையில், அதற்கான விளக்கத்தை தற்போது அளித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் பொன்முடி. விழுப்புரம் புதிய பஸ் நிலைய வெள்ளி விழா நேற்று முன்தினம் நடந்தது.

அதில் பங்கேற்ற பொன்முடி பேசியதாவது;



தி.மு.க., ஆட்சியின்போது, கடந்த 9.6.2000ல், விழுப்புரத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டி திறக்கப்பட்டது. அப்போது, இந்த இடம், பூந்தோட்டம் ஏரியாக இருந்தது.



இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து, பயிரிட்டிருந்தனர். வேறு சிலர், வீடு, கடைகள் கட்டியிருந்தனர். நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில், அந்த இடத்தில் பேருந்து நிலையம் கொண்டு வரப்பட்டது.


அப்போது வியாபாரிகள், பொதுமக்களோடு தி.மு.க.,வினர் சிலரும்கூட எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் பயனுக்காக, எதிர்ப்புகளை மீறி, புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

இப்படி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதால், அன்றைக்கு எதிர்த்த வியாபாரிகள் கூட இன்றைக்கு அதிக பலன் பெறுகின்றனர்.



அன்றைக்கு ஏரியில், பஸ் நிலையம் அமைக்கலாமா எனக் கேட்டு, சிலர் நீதிமன்றத்தை அணுகினர். ஆனால், பொது பயன்பாட்டுக்காக, நீர்நிலைகளை மாற்றி அமைக்கலாம் என்ற விதியை சுட்டிக்காட்டி, நீதிமன்ற ஒப்புதல் பெற்றோம். அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், அதற்கு உதவினார்.


விரைவில் விழுப்புரம் மாநகராட்சியாக்கப்பட்டு, நகரம் மேலும் வளரும்போது, இந்த பேருந்து நிலையத்தின் பயன்பாடு இன்னும் அதிகமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement