மனு பெட்டி சாவிகள் தொலைந்து விட்டதா? ஸ்டாலின் மீது பழனிசாமி சந்தேகம்

4

சென்னை: முதல்வரின் தனிப்பிரிவுக்கு பல பெயர்களைச் சூட்டி, மக்களை ஏமாற்றி வருவதாக, முதல்வர் ஸ்டாலின் மீது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:



தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுவதும், அம்மனுக்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு, விதிகளுக்கு உட்பட்டு நிறைவேற்றுவதும் நடைமுறை.


கடந்த 1991 - -96ல், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வரின் தனிப்பிரிவை கணினி மயமாக்கியதுடன், ஐ.ஏ.எஸ்., அதிகாரியை தனி அதிகாரியாக நியமித்தார்.



பின், 2012ல், 'அம்மா திட்டம்' என்ற ஒன்றை ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், அதிகாரிகள் வாரந்தோறும் நேரில் சென்று, முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்பட்டன.


அதேபோல, 2019ல், முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் வாயிலாக, நானும், அமைச்சர்களும் மக்களிடம் மனுக்களை பெற்று, 5 லட்சத்து 8,179 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டது.


ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், தமிழகம் முழுதும் பெரிய பெரிய பெட்டிகளை வைத்து மனுக்களை வாங்கி, பூட்டி சாவிகளை தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.


இன்றுவரை அந்தப் பெட்டிகள் திறக்கப்பட்டனவா; எத்தனை லட்சம் மனுக்கள் பெறப்பட்டன; அவை தீர்க்கப்பட்டனவா என்று, நான் பலமுறை கேட்டும் பதில் இல்லை.


அந்த பெட்டிகளின் சாவிகளை, ஸ்டாலின் தொலைத்து விட்டாரோ என்று மக்கள் சந்தேகிக்கின்றனர்.


அன்று மனு கொடுத்தவர்களிடம் ஒப்புகைச் சீட்டு வழங்கிய ஸ்டாலின், அதை எடுத்துக்கொண்டு நேரடியாக கோட்டைக்கு வந்து முதல்வர் அறையில் தன்னை சந்திக்கலாம் என்று, பசப்பு வார்த்தை பேசினார். இதுவரை ஒருவர்கூட சந்தித்ததாக தெரியவில்லை.


ஆட்சிக்கு வந்தவுடன் மக்களிடம் மனுக்களை பெறுவதற்குக்கூட, 'முதல்வரின் முகவரித் துறை, உங்கள் தொகுதியில் முதல்வர், மக்களுடன் முதல்வர், நீங்கள் நலமா, மக்களுடன் முதல்வர் -- நகரம் மற்றும் ஊரகம், மக்களுடன் முதல்வர்- - பட்டியலினத்தவர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர்' என்று, பல்வேறு பெயர்களைச் சூட்டி ஏமாற்றியதுதான் மிச்சம்.


இப்போது மீண்டும் மக்களை ஏமாற்ற, இல்லந்தோறும் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை பெறும் திட்டமிட்ட நாடகத்தை, அரங்கேற்ற உள்ளதாக தெரிய வருகிறது. முதல்வரின் தனிப்பிரிவிற்கு கலர் கலராக, காகிதப் பூக்களைப் போல், பல்வேறு பெயர்களைச் சூட்டி, அப்பாவி தமிழக மக்களின் காதுகளில் காகிதப்பூ சுற்றி, வேடிக்கை விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார், விளம்பர மாடல் முதல்வர் ஸ்டாலின்.

இந்த உண்மைகளை உணர்ந்தும், கூட்டணி தர்மம் என்ற பெயரால், பல கட்சிகள் அறிவாலயத்தை சுற்றிக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.



ஒரு திட்டத்திற்கு பல்வேறு பெயர்களைச் சூட்டி, மக்களை ஏமாற்றி விடலாம் என்று விளம்பர மாடல் ஸ்டாலினும், அவரது கூட்டமும் நினைத்தால், அவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி தர தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement