ஸ்டாலின் திறந்த சங்ககிரி பஸ் ஸ்டாண்ட் லாரிகள் நிறுத்தும் இடமாக மாறிய அவலம்

சங்ககிரி: சங்ககிரி புது பஸ் ஸ்டாண்டை, துணை முதல்வராக இருந்தபோது ஸ்டாலின் திறந்து வைத்தார். தற்போது அவர், முதல்வராக உள்ள நிலையில், பஸ் ஸ்டாண்ட் திறந்து, 16 ஆண்டாகியும், இன்னமும் பயன்பாட்டுக்கு வராமல், லாரிகள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, 2009ல், அப்போதைய துணை முதல்வர், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து சில நாட்கள் டவுன் பஸ்கள் மட்டும் வந்தன.
இதன்பின், பஸ் ஸ்டாண்ட் எதிரே சாலையோரத்தில் பெரும்பாலான பஸ்கள் நின்று செல்கின்றன. அதன் பின் ஆட்சி மாறிய போதும், பஸ் ஸ்டாண்ட் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை.
அங்கு கடை எடுத்த வியாபாரிகள், கடைகளை மூடி வைத்துள்ளனர். சிலர், கடையே வேண்டாம் என, நகராட்சியிடம் ஒப்படைத்துவிட்டனர். வருவாய் இழப்பு ஏற்பட்டும் கூட, பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் பஸ் ஸ்டாண்ட் திறந்து, 16 ஆண்டாகியும் தற்போது வரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல், லாரிகள் நிறுத்தும் இடமாகவே மாறிவிட்டது. லாரிகள் அதிகளவில் வந்து செல்வதால், சாலையும் சீரழிந்து வருகிறது.
கடைகளில் பராமரிப்பும் செய்யப்படாததால், கட்டடங்களும், பஸ் ஸ்டாண்டின் கான்கிரீட் தளங்களும் சேதம் அடைந்து வருகின்றன.
நகராட்சி தலைவியாக, தி.மு.க.,வை சேர்ந்த மணிமொழி இருந்தும் நடவடிக்கை இல்லை. சேலம் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சங்ககிரி புது பஸ் ஸ்டாண்டுக்குள், பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தினர்.
இதுகுறித்து சங்ககிரி நகராட்சி பொறியாளர் நடராஜன் கூறுகையில், ''நகராட்சி கமிஷனர் விடுமுறையில் உள்ளார். அவர் வந்ததும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.










மேலும்
-
6 மாவட்டங்களில் இன்று கனமழை: நீலகிரிக்கு நாளை 'ரெட் அலெர்ட்'
-
அமெரிக்க மருத்துவ சங்க தலைவரான இந்தியர்
-
60 ஆண்டுக்கு பின் பாஸ்போர்ட்டில் முத்திரை
-
வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பஸ்; தென் ஆப்ரிக்காவில் 13 பேர் பலி
-
நியூயார்க் - கலிபோர்னியா வரை பல நகரங்களுக்கு பரவிய போராட்டம்
-
கோவில்களில் இறந்த தலைவர்களுக்கு கொண்டாட்டமா: பொன். மாணிக்கவேல்