பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்; இஸ்ரேல் - ஈரானுக்கு இந்தியா வலியுறுத்தல்

11


புதுடில்லி: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றமான சூழலை தவிர்க்க, இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.


காசாவைச் சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வந்த ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக அணுசக்தி நிலைகளை குறிவைத்து சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானம் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது.


இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்த அச்சுறுத்தல் நீங்கும் வரை தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சமாதான முயற்சிகளை மேற்கொண்டு, இருநாடுகளிடையே நிலவும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.


இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஈரான் - இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்கும் விதமாக, பேச்சுவார்த்தை உரையாடல் மற்றும் ராஜதந்திர வழிகளில் தீர்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளும் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, அணுஆயுத தளங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவதாக வெளியாகும் செய்திகள் கவலை அளிக்கிறது. நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.


ஈரான் - இஸ்ரேல் நாடுகளுடன் இந்தியா நெருக்கமான நட்புறவை கொண்டுள்ளது. இருநாடுகளுக்கும் தேவையான அனைத்து விதமான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம். இரு நாடுகளில் இருக்கும் இந்தியர்கள், உள்ளூர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி, எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement