கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் சிறை மசோதாவுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் 

சென்னை: கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால், மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கவும், உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால், குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் வழிவகுக்கும், இரண்டு சட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

நிதி நிறுவனங்களிடம் இருந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், விவசாயிகள், பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கூலி தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோரிடம், கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால், மூன்றாண்டு சிறை தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா, ஏப்ரல் 29ல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து, தமிழக எல்லையோர மாவட்டங்களில், மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது, பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து, ஆபத்தான உயிரி மருத்துவ கழிவுகளை, பொது இடங்களில் கொட்டுவோரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வழிவகுக்கும் சட்ட திருத்த மசோதாவும், ஏப்ரல் 29ல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த இரு சட்ட மசோதாக்களுக்கும், கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துஉள்ளார். அதைத்தொடர்ந்து, இரு சட்ட மசோதாக்களும், தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement