ஏர் இந்தியா விமான விபத்து எப்படி நிகழ்ந்தது; கறுப்புப் பெட்டியை மீட்ட அதிகாரிகள்

5

ஆமதாபாத்: ஆமதாபாத் விமான விபத்தில் விமான பதிவுகள் கொண்ட டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர் சாதனத்தை இடிபாடுகளுக்கு இடையே இருந்து அதிகாரிகள் மீட்டுள்ளனர். தொடர்ந்து கறுப்புப் பெட்டியும் மீட்கப்பட்டது. அதை கொண்டு விபத்து நிகழ என்ன காரணம் என்பதை அறிய முயற்சி மேற்கொண்டு உள்ளனர்.


@1brஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 -8 டிரீம் லைனர் விமானம் 30 வினாடிகளில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பயணிகள், சிப்பந்திகள், விமானிகள் என 241 பேர் பலியாகினர். விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக பலி எண்ணிக்கை 265 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திய இந்த விபத்திற்கான காரணங்கள் பற்றிய விசாரணை தொடங்கி உள்ளது. 2 இன்ஜின்கள் பழுது, பறவை மோதல் அல்லது விமானத்தின் சக்கரங்கள் பின்வாங்குதலில் எழுந்த பிரச்னை காரணமாக விபத்து நேரிட்டு இருக்கலாம் என்பது விசாரணை அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது.


இந் நிலையில் வெடித்துச் சிதறிய விமானத்தின் இடிபாடுகளுக்கு இடையே இருந்து கறுப்புப் பெட்டியை மீட்க முயற்சி மேற்கொண்டு உள்ளனர். மொத்தம் விமானத்தில் முன்பகுதி, பின்பகுதி என 2 கறுப்புப் பெட்டிகள் உள்ளன.


தேடுதலின் ஒரு பகுதியாக இடிபாடுகளில் சிக்கி இருந்த டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டரை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.


இதுகுறித்து விசாரணைக்குழுவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இது ஒரு டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர் (Digital video recorder). அதை தான் தற்போது மீட்டுள்ளோம். தடயவியல் நிபுணர்கள் அதனை ஆராய்வர் என்றார்.


மீட்கப்பட்ட டிவிஆர் என்பது விமானத்தின் ஒரு பாதுகாப்பு சாதனம் ஆகும். விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் இருக்கும் காட்சிகளை பதிவு செய்கிறது. நீண்ட காலத்திற்கு இதில் காட்சிகளை பதிவு செய்து கொள்ளலாம்.


இந்த சாதனத்தில் காக்பிட் அறை, பயணிகள் அறை,நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள், அவசர கால வெளியேற்றங்களில் பொருத்தப்பட்டு உள்ள கேமராக்களில் இருந்து காட்சிகளை சேமிக்கிறது. இதில் சேமிக்கப்பட்டுள்ள காட்சிகளை பகுப்பாய்வு செய்து விபத்தின் காரணத்தை அறியலாம்.

கறுப்புப் பெட்டி



இதனிடையே, விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டியை விசாரணைக்குழுவினர் மருத்துவக்கல்லூரி விடுதியின் மேற்கூரையில் இருந்து மீட்டுள்ளனர். சம்பவ இடத்தில் அவர்கள் விசாரணை நடத்தி உள்ளனர்.

இது குறித்து விமான விபத்து புலனாய்வு முகமை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;

சில அறிக்கைகளுக்கு மாறாக, பரப்பப்படும் வீடியோ ரெக்கார்டர் DFDRI (Digital Flight Data Recorder) கிடையாது. கறுப்புப் பெட்டி ஒரு கூரையில் இருந்து மீட்கப்பட்டது. உடனடியாக அது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Advertisement