ஏர் இந்தியா விபத்தில் பலியான கேரள நர்ஸ்; இழிவாக விமர்சித்த துணை தாசில்தார் கைது

காசர்கோடு: ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான பெண்ணை இழிவாக பேசியதாக கேரளாவில் துணை தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது பற்றிய விவரம் வருமாறு:
கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா கொய்புரம் என்ற ஊராட்சியைச் சேர்ந்தவர் ரஞ்சிதா கோபக்குமரன், 42. ஓமன் நாட்டிலும், கடந்த ஓராண்டாக பிரிட்டனிலும் நர்சாக பணியாற்றி வந்தார்.
அவருக்கு 2019ம் ஆண்டு கேரளா சுகாதாரத் துறையில் நர்ஸ் பணி கிடைத்தது.
ஆனால், வெளிநாட்டு பணி ஒப்பந்தம் காரணமாக கேரளா அரசு பணியில் அவர் சேர முடியவில்லை. தொடர்ந்து விடுப்பில் இருந்தார்.
இந்நிலையில், வெளிநாட்டு பணி ஒப்பந்தம் நிறைவு பெறுவதை முன்னிட்டு, கேரளா அரசின் பணியில் சேரும் நோக்கத்துடன், அது தொடர்பான விண்ணப்பம் அளிப்பதற்காக நான்கு நாட்களுக்கு முன் இந்தியா வந்திருந்தார்.
அந்த வேலைகளை முடித்துவிட்டு, லண்டன் செல்வதற்கு திட்டமிட்டு இருந்தார்.
அதன்படி கொச்சியில் இருந்து ஆமதாபாத் சென்ற அவர், ஏர் இந்தியா விமானத்தில் லண்டன் புறப்பட்டபோது விமான விபத்தில் சிக்கி பலியானார்.
இந்த தகவல்கள் வெளியான நிலையில், வெள்ளரிகுண்டு துணை தாசில்தார் பவித்ரன் ஜாதி ரீதியாக விமர்சித்தார். அரசு வேலையில் சேராமல் வெளிநாட்டு வேலையில் இருந்தது பற்றியும் கடுமையாக விமர்சித்தார்.
பவித்ரனின் இந்த பதிவு, கேரளாவில் பெரும் கண்டனங்களை எழுப்பியது. சமூக வலை தளங்களில் வெளியான அவரின் பதிவு எதிரொலியாக கன்ஹன்காடு, வெள்ளரிகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், மாதர் சங்கத்தினரும் போராட்டத்தில் குதித்தன. அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின.
இதை அறியாத பவித்ரன் வழக்கம் போல் நேற்று தமது அலுவலகத்தில் பணிக்கு வந்தார். அவரை தற்காலிக பணிநீக்கம் செய்யுமாறு கலெக்டர் இன்பசேகர் உத்தரவிட்டார். தொடர்ந்து பவித்ரன் இதேபோன்ற செய்கைகளில் ஈடுபட்டு இருப்பதால் நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று அரசுக்கும் பரிந்துரைத்தார்.
இதையடுத்து, அவதூறு மற்றும் ஜாதிய ரீதியான கருத்துகளை பதிவிட்டதற்காக சஸ்பெண்ட் செய்வதாக கூறி அதற்கான ஆணையை பவித்ரனிடம் வெள்ளரிகுண்டு தாசில்தார் முரளி வழங்கினார். சஸ்பெண்ட் உத்தரவு வழங்கப்பட்ட சிறிது நேரத்தில் மாவுங்கல் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த அவரை, நடுவழியில் மடக்கி போலீசார் கைது செய்தனர்.
போராட்டக்காரர்களால் அவரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் பவித்ரனை கைது செய்த போலீசார், டி.எஸ்.பி. பாபு பெரிங்கத் இடம் ஒப்படைத்தனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பவித்ரன் அவதூறாக பேசுவது, எழுதுவது இது முதன் முறையல்ல. சமூக வலைதளம் மூலம் அவதூறு கருத்துகளை வெளியிடுவதாக நெல்லிக்காடு ஸ்ரீமத் பரமசிவா விஷ்வகர்மா கோயில் நிர்வாகம் தொடுத்த புகாரில் 2023ம் ஆண்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் பவித்ரனை எச்சரித்து அனுப்பியது.
பிப்.2024ம் ஆண்டும் இதேபோன்று சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்டு பவித்ரன் சிக்க, அப்போதும் நீதிமன்றத்தால் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். அதன்பின்னர் அதே ஆண்டின் செப்.12ம் தேதி வருவாய்துறை அமைச்சரும், 3 முறை எம்.எல்.ஏ.,வுமான சந்திரசேகரனின் ஜாதி பெயரைக் குறிப்பிட்டு இவரை போன்ற ஒரு மோசமான அமைச்சரை நான் பார்த்தது இல்லை என்று பதிவு வெளியிட்டார்.
பலமுறை எச்சரித்தும் தமது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாத நிலையில் தற்போது பவித்ரன் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.









