வங்கதேசத்தில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துங்க; இந்தியா வலியுறுத்தல்

4


புதுடில்லி: வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா, '' பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த வேண்டும்'' என வலியுறுத்தி உள்ளது.


வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: வங்க தேசத்தில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த வேண்டும். சமீப காலமாக வங்கதேசத்தில் பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது.


கலாசார அடையாளங்களை அழிக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். கவிஞர், நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் வீட்டின் மீதான தாக்குதல் இழிவானது. இந்த வன்முறை செயலை இந்தியா கடுமையாகக் கண்டிக்கிறது.


குற்றவாளிகளை கைது செய்ய, வங்கதேச இடைக்கால அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வங்கதேச அதிகாரிகள் அருங்காட்சியகத்தை தற்காலிகமாக மூடி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தொல்பொருள் துறையால் அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு, ஐந்து வேலை நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement