கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை; மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

21




சென்னை; கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் தமிழக அரசின் மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.


தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மொத்தம் 18 மசோதாக்கள் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.


அவற்றில் நிதி நிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு மே 17 ம் தேதி கவர்னர் ரவி ஒப்புதல் அளித்தார். எஞ்சிய 14 மசோதாக்கள் நிலுவையில் இருந்தன. அவற்றில் 2 மசோதாக்களுக்கு ஜூன் 2ம் தேதி ஒப்புதல் தந்தார்.


ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பது, உயிரி மருத்துவக்கழிவுகளை கொட்டினால் தண்டனை விதிக்கும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்து இருந்தார்.


இந் நிலையில், கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை விதிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ரவி இன்று ஒப்புதல் அளித்து இருக்கிறார்.


இந்த மசோதா மூலம் 5 ஆண்டு சிறையுடன் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது.


கடன் தரும் நிறுவனங்கள் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

Advertisement