ஒருபக்கம் வெயில், மறுபக்கம் தண்ணீர் தட்டுப்பாடு: தலைநகர் டில்லி மக்களின் தவிப்பு

புதுடில்லி; வெப்பத்தின் தாக்கம் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், தலைநகர் டில்லியில் தண்ணீர் தட்டுப்பாடும் மக்களை பாடாய்படுத்துகிறது.
தலைநகர் டில்லியில் வழக்கத்துக்கு மாறாக கடும் வெப்பம் வாட்டி வருகிறது. நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்வது மக்களிடையே அயர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு பக்கம் உஷ்ணம், வெயிலால் மக்கள் அவதிப்பட, மறுபக்கம் தண்ணீர் தட்டுப்பாடும் சேர்ந்துள்ளது. டில்லி நகரத்தின் முக்கிய மற்றும் முதன்மை நீர் சுத்திகரிப்பு நிலையங்களான வஜிராபாத், சந்திரவால் ஆகிய நிலையங்களில் செயல்பாடு பகுதியாக குறைக்கப்பட்டுள்ளது.
முக்கிய நீர் ஆதாரமான வஜிராபாத் குளத்தின் நீர்மட்டம் வழக்கமான அளவை விட குறைந்து 668.70 அடியாக குறைந்து உள்ளது. நகரத்திற்கு நீர் தேவையை பூர்த்தி செய்யும் குளங்களின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவதால் நீர் உட்கொள்ளளவை தக்க வைத்துக் கொள்வது சிரமம் ஆக இருப்பதாக டில்லி ஜல் போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குடிநீர் உற்பத்தியிலும், விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் ஜல்போர்டு நிர்வாகம் கூறி உள்ளது. டல்லாபுரா,பிரம்மபுரி, ஜாப்ரபாத், சுந்தர் நகரி, காசிப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
காலை, மாலை என இருநேரங்களிலும் லாரிகளிலும் தண்ணீர் நிரப்பி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் அது போதுமானதாக இல்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். வெயிலின் தாக்கத்தின் ஊடே, தண்ணீர் பற்றாக்குறையும் டில்லி மக்களை ஒருசேர வாட்டி வதைக்க ஆரம்பித்துள்ளது.