‛கலைமாமணி' பட்டம் பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்

5

சென்னை: நாட்டுப்புற பாடகியான கலைமாமணி கொல்லங்குடி கருப்பாயி அம்மாள்(99) வயது மூப்பு காரணமாக காலமானார்.


சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் முத்தன் - கருப்பியம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகளாக பிறந்தவர் கருப்பாயி. கொல்லங்குடியில் கிராமிய பாடல்களை பாடி அந்த ஊர்களில் பிரபலமாக இருந்தார். தனது ஊர் பெயரே அவரது பெயருடன் சேர்ந்து அடையாளமாக மாறியது. பின்னர் வானொலியில் தன் பணியைத் தொடங்கினார்.

அங்கு பல ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் இவரது திறமையை அறிந்து நடிகரும், இயக்குனருமான ஆர் பாண்டியராஜன் தான் இயக்கி, நடித்த ‛ஆண்பாவம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தினார். அதில் பாண்டியராஜனின் பாட்டியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ச்சியாக பாண்டியராஜன் நடித்த படங்களான ‛ஏட்டிக்கு போட்டி, கோபாலா கோபாலா, கபடி கபடி, ஆண்களை நம்பாதே' போன்ற படங்களிலும் நடிக்க வைத்தார். கடைசியாக சசிகுமார் நடித்த காரி படத்தில் நடித்தார். வயது மூப்பால் கலையுலகை விட்டு விலகினார்.



மறைந்த முன்னார் முதல்வர் ஜெயலலிதா, இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தார். இவரிடம் முதல்வர் ஜெயலலிதா உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது, எங்கள் ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று உடனடியாக பட்டா வழங்க உத்தரவிட்டார் ஜெயலலிதா.


வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த கருப்பாயி இன்று (ஜுன் 14) காலை 8 மணியளவில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை கொல்லங்குடியில் உள்ள அவரது இல்லம் அருகே நடைபெறுகிறது.

Advertisement