அணுசக்தி ஒப்பந்தம் செய்யாவிட்டால் நிலைமை மோசமாகும்; ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

8

வாஷிங்டன்: அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு ஈரானுக்கு மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். அவர், "ஒப்பந்தம் செய்யாவிட்டால் தாக்குதலால் நிலைமை மோசமாகும்" என்றும் எச்சரித்துள்ளார்.


இஸ்ரேல், ஈரான் இடையே நேரடி போர் வெடித்து இருக்கிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டது. இதற்காக ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் எச்சரித்து வந்தன. தற்போது, ஈரானின் முக்கியமான அணு ஆராய்ச்சி கூடங்கள், அன்டர் கிரவுன்ட் யுரேனியம் செறிவூட்டல் மையங்கள், ஏவுகணை ஏவுதளங்கள், ராணுவ தளங்களை குறி வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.


இந்நிலையில், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு ஈரானுக்கு மீண்டும் அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.


இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரானுக்கு ஒரு ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு கொடுத்தேன். நான் அவர்களிடம், அதைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும், எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை.


ஒப்பந்தம் செய்யாவிட்டால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று நான் அவர்களிடம் சொன்னேன். உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ உபகரணங்களை அமெரிக்கா தயாரிக்கிறது. மேலும் இஸ்ரேலிடம் ஆயுதங்கள் நிறைய உள்ளது.


அதை எப்படிப் பயன்படுத்துவது என்பது அவர்களுக்குத் தெரியும். சில ஈரான் தலைவர்கள் துணிச்சலுடன் பேசினார்கள், ஆனால் என்ன நடக்கப் போகிறது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் இப்போது இறந்துவிட்டார்கள். எங்களுடன் ஒப்பந்தம் செய்யாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும்.ஏற்கனவே பெரிய மரணமும், அழிவும் நடந்துள்ளது.


ஆனால் அடுத்த திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் இன்னும் கொடூரமானவையாக இருப்பதால், இந்தப் படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர இன்னும் நேரம் இருக்கிறது. அணு ஆயுத ஒப்பந்தங்கள் போட வேண்டும். இதனை செய்தால் தாக்குதல்கள் மற்றும் மரணங்கள் நிகழாது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement