வேன் உரிமையாளரை கத்தியால் குத்தி கொன்ற கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை!

ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே வேன் உரிமையாளரை கத்தியால் குத்திக்கொலை செய்த கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார்.



இதுபற்றிய விவரம் வருமாறு;


சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் நரியங்குடி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் 47, இவர் திருப்புல்லாணி அருகேயுள்ள பஞ்சந்தாங்கி கிராமத்தில் வசித்து வந்தார். இவரது மனைவி சங்கரி கிராமப்புற தபால் அலுவலகத்தில் போஸ்ட் மேனாக பணிபுரிந்தார். இவர்களுக்கு மங்கயைர்கரசி என்ற மகளும், வைரமுத்து என்ற மகனும் உள்ளனர்.


சக்திவேல் 20 ஆண்டுகளாக சரக்கு வாகனத்தில் ராமநாதபுரத்திலிருந்து மளிகை பொருட்களை எடுத்து வந்து வண்ணாங்குண்டு உட்பட சுற்றியுள்ள கிராமங்களுக்கு சப்ளை செய்து வந்தார். இவர் 2019 ல் வண்ணாங்குண்டு பகுதியில் சரக்கு வாகனத்தில் சென்ற போது மயில் ஒன்று வாகனத்தில் அடிபட்டுள்ளது.


அப்பகுதியை சேர்ந்த சித்திரைமான் மகன் ஞானபாண்டியன் 47, என்பவர் மயிலை மீட்டார். இது தொடர்பாக சக்திவேலுக்கும், ஞானபாண்டியனுக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதமாக மாறியது.


2019 அக்., 24ல் வண்ணாங்கண்டு வி.ஏ.ஓ., அலுவலகம் அருகேயுள்ள ரோட்டில் மினி சரக்குவாகனத்தில் வந்த சக்திவேலை மறித்த ஞானபாண்டியன் கத்தியால் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் பலியானார். இது குறித்து சக்திவேல் மனைவி சங்கரி கொடுத்த புகாரின் பேரில் திருப்புல்லாணி போலீசார் கொத்தனார் ஞானபாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின் ஜாமினில் ஞானபாண்டியன் வந்தார்.


இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் மாவட்ட அரசு தலைமை வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார். வழக்கினை விசாரித்த நீதிபதி மெஹபூப் அலிகான் கொத்தனார் ஞான பாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Advertisement