ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்னவாக இருக்கும்; நிபுணர் கூறுவது இதுதான்!

புதுடில்லி: ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு இன்ஜின் கோளாறை காட்டிலும், வேறு பல காரணங்கள் இருக்கலாம் என மூத்த விமானி ஸ்டீவ் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு ஏர் இந்தியாவின் 'போயிங்' 787-8' ரக 'ட்ரீம் லைனர்' இரட்டை இன்ஜின் விமானம், நேற்று மதியம் 1:38 மணிக்கு புறப்பட்டது. 30 வினாடிகளில் இந்த விமானம், பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் பயணித்தவர்கள், விழுந்த இடத்தில் இருந்தவர்கள், விடுதி மாணவர்கள் உட்பட 265 பேர் உயிரிழந்துள்ளனர். விமான விபத்து தொடர்பாக, பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.
விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து நிபுணரும், அனுபவம் வாய்ந்த விமானியுமான ஸ்டீவ் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இவர் போயிங் 787-8 டிரீம் லைனர் மற்றும் போயிங் 777 ரக விமானங்களை இயக்கிய அனுபவம் அவருக்கு உள்ளது.
அந்த வீடியோவில் ஸ்டீவ் கூறியுள்ளதாவது:
இந்த விமானத்தில், ஈர்ப்பு விசையை எதிர்க்கும் 'லிப்ட்' செயல் இழந்ததற்கு 3 காரணங்கள் சொல்லப்படுகின்றன.
(லிப்ட் என்பது புவியீர்ப்பு விசைக்கு எதிராக விமானத்தை மேலே உயர பறக்கச் செய்வதற்கான திறன்.)
விமானத்தை மேலே பறக்க செய்யும் போது பயன்படும் 'பிளாப்' நிலைகள் குறித்து பலவித கணிப்புகள் வருகின்றன.
(பிளாப் என்பவை விமானத்தின் இறக்கைகளின் ஓரத்தில் இருக்கும் கருவி. இவை குறைந்த வேகத்தில் விமானம் பறக்கும்போது, உயர செல்வதற்கான உந்து சக்தியை தருபவை. விமானம் தரையிறங்கும்போதும், மேலே கிளம்பும் போதும், இதன் பங்கு முக்கியம் வாய்ந்தவை.)
விமானம் இருந்த உயரத்தில் இருந்து அதனை கணிக்க முடியாது. போயிங் 777 ரக விமானங்களை காட்டிலும் போயிங் 787 ரக விமானங்கள் திறன் வாய்ந்தவை. இந்த விமானத்தில் எந்த பிரச்னையும் இருந்ததாக தெரியவில்லை.
விமானத்தில் இருந்த இரண்டு இன்ஜின்களும், உந்து விசையை உருவாக்குகின்றனவா என தெரியவில்லை. தீப்பொறி, தீப்பிழம்பு ஏதும் இல்லை. வழக்கமாக இயங்கவில்லை என்பதற்கான அறிகுறியையும் காட்டவில்லை. விமானத்தில் 'லிப்ட்' திறன் தோல்வி ஏற்பட்டு உள்ளது. இதற்கு மின்சாரம் துண்டிப்பு காரணமாக இருக்கலாம். 'லிப்ட்' தோல்வியால், விமானம் பறப்பதை நிறுத்திவிட்டது என்பது முக்கியமான கருத்து.
இரண்டு இன்ஜின்களும் பழுதடைந்து இருந்தால், அதற்கு பறவைகள் மோதல் காரணமாக இருக்கலாம். ஆனால், வீடியோவில் அப்படி ஏதும் பார்க்க முடியவில்லை. இன்ஜின்களில் இருந்தும் எந்த தீப்பிழம்பும் இல்லை.
எரிபொருள் கலப்படம் என்பது மற்றொரு சாத்தியக்கூறு. இரண்டு இன்ஜின்களும் எரிபொருள் பகிரப்பட்ட இருந்தன. அப்போது எந்த பிரச்னையும் இல்லை. அனைத்தும் சுமுகமாக உள்ள நிலையில் இயந்திர பிரச்னையாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.
மற்றொரு காரணம், துணை விமானியை கியரை உரிய நேரத்தில் உயர்த்தும்படி விமானி கூறியிருப்பார். ஆனால், துணை விமானி பிளாப் ஹேண்டிலை பிடித்ததுடன், கியருக்கு பதில் 'பிளாப்'பை உயர்த்தியிருப்பார் என நினைக்கிறேன். அப்படி நடந்து இருந்தால், விமானம் பறப்பது நின்று இருக்கும். அந்த நேரத்தில் இறக்கைகளுக்கு மேல் உள்ள 'லிப்ட்' செயல் இழந்திருக்கும்.
விமானம் திடீரென வேகத்தை இழந்ததும், உயரத்தையும் விமானி இழந்திருக்கிறார். விசாரணை முடிவில் முழுமையான விவரங்கள் தெரியவரும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.










மேலும்
-
ஆமதாபாத்தில் நடந்த விபத்துக்கு முன் விமானி கூறியது என்ன?
-
ஈரானின் புதிய ராணுவ தளபதியாக அமீர் ஹடாமி அறிவிப்பு!
-
போலீஸ் ஸ்டேஷனுக்கே பாதுகாப்பில்லை; தி.மு.க., சாதனை பட்டியலில் சேர்த்துக்கோங்க; இ.பி.எஸ்., கிண்டல்
-
ஜூன் 19ல் விண்வெளி செல்கிறார் சுபான்ஷூ சுக்லா; இஸ்ரோ அறிவிப்பு
-
கோவை ஏர்போர்ட்டில் பெண் பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்!
-
தாய்லாந்து விமான விபத்தில் உயிர் பிழைத்த பாடகரின் இருக்கை எண்ணும் '11ஏ' தான்!