ஜூன் 19ல் விண்வெளி செல்கிறார் சுபான்ஷூ சுக்லா; இஸ்ரோ அறிவிப்பு

புதுடில்லி: தொழில்நுட்பக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட 'இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவின் விண்வெளி பயணத்திற்கான தேதியை வெளியிட்டது இஸ்ரோ. வரும் 19ம் தேதி அவர் சர்வதேச விண்வெளி நிலையம் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாசா' எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் இணைந்து, 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.
கடந்த மே மாதம் 29ம் தேதி புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா செல்ல இருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு, ஜூன் 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் விண்வெளி பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பிறகு இறுதி நேரத்தில் தொழில்நுட்ப பிரச்னையால் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
திரவ ஆக்ஸிஜன் கசிவு காரணமாக 3 முறை பயணம் ஒத்தவைக்கப்பட்ட நிலையில், வரும் ஜூன் 19ம் தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா செல்கிறார். அவருடன் ஸ்லோவோஷ் உஷ்னன்ஷ்கி, போலாந்தின் விஷ்னிவ்ஷ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோரும் பயணிக்க இருக்கின்றனர்.
இஸ்ரோ, ஆக்ஸியோம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விஞ்ஞானிகள் இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்தத் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.