ஈரான் மீது தாக்குதல்: மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுடன் ஆலோசித்த இஸ்ரேல் பிரதமர்

1


டெல் அவிவ்: ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னர், பிரதமர் மோடி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் அதிபர்களிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.


இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் நடந்து வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக உள்ள ஈரான், அவ்வபோது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேலும் உடனடியாக பதிலடி கொடுத்தது.

இச்சூழ்நிலையில், இஸ்ரேலின் அணுசக்தி ரகசியங்களை ஈரான் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து இன்று,ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் முக்கிய நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. மேலும் அந்நாட்டின் மொஸாட்டும் அமைப்பும் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் விஞ்ஞானிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதிலடியாக ஈரானும் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது.


இச்சூழ்நிலையில் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த தாக்குதலை துவக்குவதற்கு முன்னர் நமது பிரதமர் மோடி, ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஜ் மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ நேற்று இரவு ஈரான் மீதான தாக்குதல் குறித்து கலந்துரையாடினார்.


அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் மற்றும் பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் ஆகியோருடன் அவர் கலந்துரையாட உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

வலியுறுத்தல்



பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தற்போதைய சூழ்நிலை குறித்த அவர் விரிவாக விளக்கினார். நான் இந்தியாவின் கவலையை தெரிவித்ததுடன், அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் கொண்டு வருவதன் அவசியத்தை வலியுறுத்தினேன். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.

Advertisement